Last Updated:
உயிரிழந்த நிஷாந்த்தின் உடலை உடனடியாக மீட்க வேண்டும் என அவரது மனைவி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
ஓமன் நாட்டின் கடல் பகுதியில் கப்பலில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதனின் உடல் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஓமன் நாட்டின் கடல்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த எம்டி செலஸ்டியல் என்ற கப்பலில் பணியாற்றி வந்த தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான நிஷாந்த் உயிர்த்தநாதன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கடந்த 11ஆம் தேதி நிஷாந்த் உயிரிழந்த நிலையில் கப்பலில் உடலைப் பதப்படுத்தும் வசதி இல்லாததால், அவரது உடல் அழுகத் தொடங்கியது. இதனால், குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களை வைத்து முடிந்தவரை உடலை அழுகாமல் தடுக்க சக மாலுமிகள் போராடி வந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த நிஷாந்த்தின் உடலை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி சராபின், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இச்சூழலில் உயிரிழந்த நிஷாந்த்தின் உடல் இருக்கும் கப்பல் துக்ம் துறைமுகம் வந்தடைந்துள்ளதாகவும், விசாரணைக்கு பிறகு விரைவில் அவரது உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஓமன் கடலில் இன்ஜின் பழுது காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு கப்பலான MSC VIRAT -ல் சிக்கித்தவித்த 14 இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Jun 15, 2026 10:10 AM IST


