Last Updated:
தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வளைகுடா நாடான கத்தாரில் உள்ள ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரின் பர்சான் எரிவாயு ஆலையில் நேற்று முன்தினம் (ஜூன் 21) இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டிருந்தது. இந்த விபத்தில் 54 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும், 18 பேர் மாயமானதாகவும் கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. எனினும், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அபாயகரமான கசிவு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.
இந்நிலையில், விபத்துக்குப் பின் தீ மளமளவென பரவியதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும், 66 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதில் குறிப்பாக தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த பபித் என்பவர் மற்றும் பணகுடி அடுத்த சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சுர்ஜித் என்பவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


