கோலா லங்காட்:
கான்சோங் (Kanchong) பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் இன்ஜின் எண்ணெயைத் திருடிய வழக்கில் தொடர்புடைய இரு உள்ளூர் ஆண்களைக் காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
நேற்று மாலை 4.01 மணியளவில் எரிபொருள் நிலையத்தில் பணிபுரியும் 31 வயது மதிக்கத்தக்கப் பெண் ஊழியர் ஒருவரிடமிருந்து இத்திருட்டுச் சம்பவம் குறித்துப் புகாரைப் பெற்றதாக கோலா லங்காட் மாவட்டக் காவல்துறைத் தலைவர், சூப்பிரிண்டெண்டன் முகமட் அக்மல்ரிசால் ராட்ஸி தெரிவித்தார்.
புகாரளித்த பெண் ஊழியர், சந்தேக நபர் ஒருவர் விற்பனைப் பிரிவிலிருந்து தலா ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 போத்தல் மோட்டார் சைக்கிள் இன்ஜின் எண்ணெயை எடுத்துக்கொண்டு, அதற்கான பணத்தைச் செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் போது, அங்குள்ள CCTV கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், கருப்பு நிறக் கண்ணாடி, குட்டைக்கை சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த சந்தேக நபர், விற்பனைப் பொருட்களுக்கான அடுக்கிலிருந்து இன்ஜின் எண்ணெயைத் திருடுவதைக் காட்டியது.
மேலும், திருடிய பொருட்களுடன் அவர் வெளியில் தயாராக நின்றிருந்த, முன்னரே திருடப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட ‘பெரோடுவா மைவி’ (Perodua Myvi) ரகக் கார் ஒன்றில் ஏறித் தப்பியோடியதும் சிசிடிவி பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டது.
கிடைத்த துல்லியமான தகவல்களின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீஸார், கோலா லங்காட் நகராண்மைக் கழகத்தின் (MPKL) உணவு வளாகம் (Food Court) ஒன்றில் வைத்து, 40 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
இருப்பினும், இக்குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைத் தீவிரமாகத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் முகமட் அக்மல்ரிசால் தெரிவித்தார்.
இவ்வழக்கு தொடர்பாகக் குற்றவியல் சட்டப் பிரிவு 380-இன் (கட்டிடத்திற்குள் திருட்டு) கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது. “இவ்விசாரணையைப் பாதிக்கும் வகையில் பொதுமக்கள் யாரும் இணையத்தளங்களிலோ அல்லது வெளியிலோ தேவையற்ற யூகங்களை பரப்ப வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



