WhatsApp-ஐ ஆளப்போகும் இந்தியர்..!! யார் இந்த குணால் ஷா? மார்க்கே தேடி வந்து பதவி தர காரணம் என்ன?
உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கையோடு பயன்படுத்தும் ஒரு தகவல் தொடர்பு செயலி தான் வாட்ஸ் அப். இந்த வாட்ஸ் அப்பின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாட்ஸ் அப் செயலியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, CRED நிறுவனர் குணால் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை உள்ளடக்கிய மெட்டா நிறுவனம், பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் CRED நிறுவனத்தில் 8,550 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் CRED நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 4 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்தை தொடர்ந்து, CRED நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகும் குணால் ஷா, வாட்ஸ் அப் செயலியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம், அவருக்குப் பதிலாக, CRED நிறுவனத்தின் நிதித்துறைத் தலைவராக இருக்கும் மிதென் சம்பத், அந்நிறுவனத்தின் இடைக்கால சிஇஓவாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் வணிகம் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவைகளை பலப்படுத்தும் நோக்கத்தோடு மெட்டா நிறுவனம் இந்த அதிரடி நகர்வை முன்னெடுத்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த வில்கேத் கார்ட் அந்த பதவியில் இருந்து விலகி ஏஐ பிரிவுக்கு தலைமை தாங்க சென்றுவிட்டார். இந்நிலையில் தான் குணால் ஷாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
குணால் ஷா தனது 15 வயதிலேயே குடும்பத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேலை செய்யத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போதே பகுதிநேர வேலைகள், ஃப்ரீலான்ஸ் டிசைனிங் எனப் பல பணிகளைச் செய்தவர். இவர் முதலில் ‘பைசாபேக்’ (PaisaBack) என்ற சிறிய நிறுவனத்தைத் தொடங்கினார், அதுவே பின்னாளில் ‘ஃப்ரீசார்ஜ்’ (FreeCharge) ஆக உருவெடுத்தது. இந்த நிறுவனத்தை சுமார் ரூ.2,800 கோடிக்கு விற்பனை செய்தது இவரது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய மைல்கல்லாகும்.
2018இல் ‘CRED’ செயலியைத் தொடங்கினார். கிரெடிட் கார்டு பில்களைச் சரியான நேரத்தில் செலுத்துபவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் இந்தத் தளம், இந்திய அளவில் மிக மதிப்புமிக்க நிதித்தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. இது சுமார் $325 மில்லியன் வருவாயை எட்டியுள்ளது. தற்போது, CRED நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகி, மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய தலைமை குழுவில் இணைந்து, வாட்ஸ்அப் நிறுவனத்தை வழிநடத்த உள்ளார்.
தத்துவப் படிப்பில் (Philosophy) பட்டம் பெற்ற இவர், ஒரு சிறந்த தொழிலதிபர் மட்டுமல்லாமல், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இருந்து வருகிறார். CRED-ஐ லாபகரமான நிறுவனமாக மாற்றியது இவரது சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் ஸ்டார்ட் அப் தொழில்முனைவோருக்கு எல்லாம் முன் உதாரணமாக இருப்பவர். சுமார் 500 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்.

