CJP போராட்டத்தின் எதிரொலி.. டெல்லியில் 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்..!
டெல்லியில் ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து காக்ரோச் ஜனதா கட்சியினர் (CJP) நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போலீஸ் தடியடி சம்பவத்திற்கு பின் போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது.
டெல்லியில் மட்டும் அல்லாமல் நாட்டில் பல இடத்திலும், உலகில் பல நாடுகளிலும் போராட்டம் துவங்கியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் பாதுக்காப்பை உறுதி செய்யும் நோக்கில் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம் அருகே அமைந்துள்ள 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மறு உத்தரவு வரும் வரையில் மூடப்பட உள்ளதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி லோக் கல்யாண் மார்க் (Lok Kalyan Marg), ராஜீவ் சோக் (Rajiv Chowk), பட்டேல் சவுக் (Patel Chowk), பாரகம்பா ரோடு (Barakhamba Road), உச்சநீதிமன்றம் (Supreme Court), சேவா சதன், ஜன்பத் (Janpath), மண்டி ஹவுஸ் (Mandi House), சென்ட்ரல் செக்ரட்டேரியட் (Central Secretariat), ஐடிஓ (ITO), டெல்லி கேட் (Delhi Gate), இந்திரபிரஸ்தா (Indraprastha), கான் மார்க்கெட் (Khan Market), ஜோர் பாக் (Jor Bagh), சிவாஜி ஸ்டேடியம் (Shivaji Stadium) ஆகிய 16 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட உள்ளது.
இந்த மெட்ரோ நிலையங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ளவை, இதில் லோக் கல்யாண் மார்க் மெட்ரோ நிலையம் பிரதமரின் வீட்டுக்கு அருகில் இருப்பவை.
நேற்று முன்தினம் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபயணமாக பேரணியாக செல்ல முயன்ற போது தான் போலீசார் தடியடி நடத்தினர். இது பெரும் பிரச்சனையாக வெடித்த நிலையில் இந்தியா முழுவதும் இருக்கும் சிஜேபி ஆதரவாளர்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டு உள்ளனர்.
மேலும் சிஜேபி கட்சியினரின் போராட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் பிரதமர் வீட்டின் முன்பு ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார். இதை தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் அவருடன் இருந்தவர்களை டெல்லி காவல் துறை கைது செய்தது 3 மணிநேர காவலகுக்கு பின்பு விடுவித்தது.
இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் காரணமாக பாதுக்காப்பு காரணமாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
