கோலாலம்பூர்:
மலாக்காவிலுள்ள பத்து பெரண்டாம், தாமான் மலாக்கா பாருவில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா ரகக் காரின் கதவு திடீரெனத் தானாகப் பூட்டிக்கொண்டதால், அதற்குள் சிக்கிய 3 வயதுச் சிறுவன் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டான்.
இன்று பிற்பகல் 1.34 மணியளவில் இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதாக மலாக்கா மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மக்கள் தொடர்பு அதிகாரி, உதவித் தீயணைப்பு ஆணையர் II முகமது ஹஃபிட்சதுல்லா ரஷீத் தெரிவித்தார்.
அழைப்பு கிடைத்த வெறும் 8 நிமிடங்களுக்குள் மலாக்கா தெங்கா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சம்பவ இடத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் காரின் உள்ளே பூட்டப்பட்ட நிலையில் இருப்பதை தீயணைப்புப் படையினர் உறுதி செய்தனர்.
சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தித் தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் செயல்பட்டுச் சில நிமிடங்களிலேயே காரின் கதவை வெற்றிகரமாகத் திறந்தனர்.
காரின் உள்ளே சிக்கியிருந்த சிறுவன் எவ்விதக் காயமுமின்றிப் பாதுகாப்பான நிலையில் மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். தீயணைப்பு வீரர்களின் இந்த விரைவான நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.



