ரூ.20 சாப்பாடு டூ ரூ.2.5 கோடி பிசினஸ்! 65 வயதில் சக்கை போடு போடும் அம்மா கிச்சன்!
இன்றைய உலகில் தொழில் தொடங்குவதற்கான எல்லா வசதியும் இருந்தாலும் சிலர் எதையும் செய்ய பயப்படுகின்றனர். ஆனால் எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமல் தன்னுடைய 65-ஆவது வயதில் ரூ.2.5 கோடி வருமானம் ஈட்டி தரும் ஒரு பெரிய உணவு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார் ஒரு மூதாட்டி. அவர் அப்படி என்ன செய்தார்? எப்படி இவ்வளவு பெரிய வருமானம் சாத்தியமானது? என்ற விவரங்களை தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
தேவ்னி தேவி என்ற 65 வயது பெண்மணி ஒரு பெரிய குடும்பத்தை பராமரித்து வந்தவர். அவரிடம் இருந்தது அந்த அனுபவம் மட்டும் தான். பாட்னாவில் வீட்டை விட்டு வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்குவதை தன்னுடைய தொழிலாக வைத்திருந்தார். அப்படி ஆரம்பித்தது தான் அவருடைய தொழிலதிபர் பயணம்.

ஆரம்ப கால வாழ்க்கை: தேவ்னி தேவிக்கு 16 வயதில் திருமணம் நடந்தது. பீகாரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்த குடும்பமோ 25 பேரை கொண்ட மிகப்பெரிய கூட்டுக் குடும்பம். தினமும் அதிக அளவில் சமைக்க வேண்டி வரும். அந்த அனுபவமே அவருக்கு பெரிய அடித்தளமாக அமைந்தது. 2002-ஆம் ஆண்டில் பிள்ளைகளின் படிப்பிற்காக பாட்னா வந்தார். அங்கு சில மாணவர்கள் சாப்பிடும் உணவில் தரம் இல்லாமல் இருந்ததை பார்த்தார்.
உடனே குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு உணவை சமைத்து வழங்க முடிவு செய்தார். அப்படி அவர் ஆரம்பித்த தொழிலுக்கு முதல் வாடிக்கையாளராக வந்தவர் சௌரப் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர். இவருக்கு சமையல், பேக்கிங், டெலிவரி என அனைத்தும் தெரியும். ஒவ்வொரு நாளும் இதை தனியாகவே செய்து வந்தார்.
இவருடைய கவனிப்பை பார்த்த மாணவர்களோ அவரை அன்புடன் அம்மா என்று அழைக்க தொடங்கினர். ஆரம்பத்தில் அவருடைய குடும்பமே ஆதரவு தரவில்லை. கணவர் இதனால் ஆறு மாதங்கள் வரை பேசாமல் இருந்துள்ளார். இருப்பினும் தேவ்னி தேவி மனம் தளரவில்லை. தன் நிதி சுதந்திரத்திற்காக தொடர்ந்து முயற்சி செய்தார்.
சேமிப்பிலிருந்து தொடங்கிய தொழில்: கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சேமிப்பையும் தொழிலுக்காக பயன்படுத்தினார். தான் சிறுக சிறுக சேர்த்து வைத்த ரூ.80,000 சேமிப்பைக் கொண்டு எட்டு ரிக்ஷாக்களை வாங்கி வாடகைக்கு விட்டார். 2009 ஆம் ஆண்டில் சம்ரிதி பெண்கள் விடுதியை தொடங்கினார். அதன் பின்னர் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது இவருடைய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்காக தொடர்ந்து உணவு சமைத்து வழங்கி வந்தார். இதில் விஷயம் என்னவென்றால் தேவ்னி தேவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது அவர் யார் யாருக்கு எல்லாம் உணவு சமைத்து கொடுத்தாரோ அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களே அவரை கவனித்துக் கொண்டனர்.
ஆன்லைன் வணிகம்: இப்படியே தொடர்ந்து தன்னால் இயன்றவர்களுக்கு உணவு சமைத்து வந்த தேவ்னி தேவி 2022-ஆம் ஆண்டு அவருடைய மகனின் ஆலோசனைப்படி “அம்மா கிட்சன்” என்ற ஆன்லைன் வணிகத்தில் நுழைந்தார். இதுவே அவருடைய தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. ஆரம்பத்தில் தேவியின் குடும்பத்தினரை போலவே அவருடைய மூத்த மகனும் அவருக்கு ஆதரவு தரவில்லை. பின்னர் சில நாட்கள் கழித்து அவருடைய மூத்த மகனுக்கு வேலை இல்லாமல் போகவே அப்போது தனது தாயாருடன் சேர்ந்து தொழிலை நிர்வகித்துக் கொண்டார்.
தேவ்னி தேவி பெரிதாக படிக்கவில்லை. அப்போது தனது தொழிலுக்கு போடும் அளவுக்கு முதலீடும் அவரிடம் இல்லை. அவருடைய சமையல் கலை மட்டும் தான் அவருக்கு கை கொடுத்தது. வெறும் 20 ரூபாய்க்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவை வழங்க தொடங்கினார்.வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களால் இதற்கு மேல் பணம் கொடுத்து சாப்பிட முடியாது என்ற காரணத்தினால் செலவுகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் இவ்வளவு மலிவான விலைக்கு தரமான உணவை வழங்கி வந்தார்.
இன்று பாட்னாவில் இவருக்குச் சொந்தமாக 2 உணவகங்கள் உள்ளன. 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர். சுமார் 350 ஆன்லைன் ஆர்டர்களை தினசரி அடிப்படையில் டெலிவரி செய்து வருகிறது “அம்மா கிட்சன்”.
ஆரம்பத்தில் 20 ரூபாய்க்கு தொடங்கிய உணவு விற்பனை இன்று ரூ.100 முதல் ரூ.300 வரை விற்பனை ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.2.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறார். துணிச்சலும் மன உறுதியும் இருந்தால் போதும் யாருடைய ஆதரவும் இல்லை என்றாலும் சாதித்து விடலாம் என்பதற்கு தேவ்னி தேவி ஒரு சிறந்த உதாரணம்.

