கோலாலம்பூர்:
விபச்சாரத்தில் ஈடுபட்டது மற்றும் பயண அனுமதி விதிமுறைகளை மீறியது தொடர்பாகத் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் மீது நேற்று பத்து பஹாட் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட நந்திசா புன்ரோட் என்ற பெண்ணுக்கு மலாய் மொழி புரியவில்லை என்று மஜிஸ்ட்ரேட் ஐமி நவ்வர் முகமட் ஒத்மானிடம் தெரிவித்தால், அவரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
முதல் குற்றச்சாட்டின்படி, நந்திசா கடந்த ஆகஸ்ட் 31 அன்று மாலை 6.30 மணியளவில் ஜாலான் அபு பக்கார் அருகிலுள்ள ஒரு விடுதியில் விபச்சார நடவடிக்கைகளுக்காக வாடிக்கையாளர்களை ஈர்த்ததாகக் கூறப்படுகிறது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 372B இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டிற்கு, அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அதே நேரத்தில், அதே இடத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டுத் தனது பயண அனுமதியின் நிபந்தனைகளை மீறியதாக அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. இது 1963-ஆம் ஆண்டின் குடிநுழைவு விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
தாய்லாந்து மொழி மொழிபெயர்ப்பாளர் முன்னிலையில் இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக நீதிமன்றம் செப்டம்பர் 9-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது. அதுவரை அவருக்குப் பிணை எதுவும் வழங்கப்படவில்லை.



