நாடு முழுவதும் மூடுபனி நிலைமை மோசமடைந்து வருவதால், இன்று காலை 9 மணி நிலவரப்படி பெட்டாலிங் ஜெயாவும் காற்றின் தரம் மோசமடைந்த பகுதிகளின் பட்டியலில் இணைந்தது; அங்கு காற்று தூய்மைக்கேட்டு குறியீடு (API) 149-ஐ எட்டியது.
மலேசிய காற்று தூய்மைக்கேட்டு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையப்பக்கத்தின் தரவுகளின்படி, 10 மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களில் உள்ள 30 கண்காணிப்பு நிலையங்கள் 101 முதல் 200 வரையிலான ஆரோக்கியமற்ற அளவிலான காற்று தரத்தைப் பதிவு செய்துள்ளன.
சரவாக் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள் முறையே ஐந்து மற்றும் ஆறு கண்காணிப்பு நிலையங்களுடன் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாகப் பதிவாகியுள்ளன. செரியன் நாட்டின் மிக உயர்ந்த அளவாக 180-ஐப் பதிவு செய்தது, அதற்கு அடுத்தபடியாக சிலாங்கூரில் உள்ள ஜோஹான் செத்தியா 175-ஐப் பதிவு செய்தது.
சரவாக்கில் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் ஸ்ரீ அமான் (168), கூச்சிங் (164), சமரஹான் (157) மற்றும் சரிகேய் (152) ஆகும்.
சிலாங்கூரில், ஷா ஆலம் 162-ஐப் பதிவு செய்தது, அதைத் தொடர்ந்து கோலா சிலாங்கூர் (156), கிள்ளான் மற்றும் பந்திங் (ஒவ்வொன்றும் 152) ஆகிய இடங்கள் பதிவாகின.
பேராக் மாநிலம் ஐந்து ஆரோக்கியமற்ற அளவுகளைப் பதிவு செய்தது: தஞ்சோங் மாலிம் 155, அதைத் தொடர்ந்து ஸ்ரீ மஞ்சோங் (154), தாசேக் ஈப்போ (153), தைப்பிங் (152) மற்றும் பெகோ ஈப்போ (134) ஆகும்.
ஜொகூரில் நான்கு பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன; செகாமட், பத்து பகாட் மற்றும் தாங்காங் ஆகிய இடங்கள் ஒவ்வொன்றும் 152-ஐயும், கோத்தா திங்கி 125-ஐயும் பதிவு செய்தன.
பினாங்கு மூன்று ஆரோக்கியமற்ற அளவுகளைப் பதிவு செய்தது, மின்டென் 154, பாலிக் புளாவ் 152 மற்றும் செபெராங் பிறை 136 ஆகிய அளவுகளைப் பதிவு செய்தன.
நெகிரி செம்பிலான், மலாக்கா, கெடா, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன, இதில் புத்ராஜெயா 157 என்ற அதிகபட்ச அளவைப் பதிவு செய்தது. நீலாய், புக்கிட் ரம்பாய், சுங்கை பட்டாணி மற்றும் பத்து மூடா ஆகிய இடங்களிலும் 150-க்கும் அதிகமான காற்று மாசுபாடு குறியீடுகள் பதிவாகியுள்ளன. இது குறித்த முழுமையான செய்தியைச் செய்தித்தாள்களில் காணலாம்.
நாடு முழுவதும் 37 பகுதிகள் மிதமான காற்று தரத்தைப் பதிவு செய்துள்ளன.
காற்று தூய்மைக்கேட்டு குறியீடு (API) 0 முதல் 50 வரை இருந்தால் நல்ல காற்று தரம்; 51 முதல் 100 வரை மிதமானது; 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றது; 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது; மற்றும் 300-க்கு மேல் இருந்தால் அது அபாயகரமானது என்பதைக் குறிக்கிறது.
பொது சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடிய கணிசமான மாற்றங்களைக் கண்டறிவதற்காக, சுற்றுச்சூழல் துறை 68 கண்காணிப்பு நிலையங்கள் மூலம் நாட்டின் சுற்றுப்புற காற்று தரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதற்கிடையில், நாட்டின் 17 பகுதிகளில் முதலாம் கட்ட வெப்பமான வானிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
ஒரு பகுதியில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து குறைந்தது மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் போது முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் MetMalaysia Heat Alert Notice வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 11 பகுதிகள் தீபகற்ப மலேசியாவில் உள்ளவை என்று குறிப்பிட்டுள்ளது
மேலும், சபாவில் உள்ள தெலுபிட் (Telupid), தெனோம் (Tenom), சண்டக்கான் (Sandakan), பித்தாஸ் (Pitas) மற்றும் பெலூரான் (Beluran) ஆகிய ஐந்து பகுதிகளுக்கும், சரவாக்கில் உள்ள மாருடி (Marudi) பகுதிக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-fmt
