கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் தொடர்பான விவகாரத்தில், அம்மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம், எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி முறை சார்ந்தது என்றும், குறிப்பாக மலாய் மக்கள் இதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று (செப்டம்பர் 18) புத்ராஜெயாவில் வெள்ளிக்கிழமைத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அன்வார், மாநில ஆட்சியாளரைப் பதவியிலிருந்து அகற்றுவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல எனச் சுட்டிக்காட்டினார்.”
இது அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி முறை சார்ந்த விவகாரம் என்பதால், மாநில அரசாங்கமும் குறிப்பாக மாநில மந்திரி பெசாரும் சாக்குப்போக்குகள் சொல்லாமலும் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமலும் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார் என்று நம்புகிறேன். மலாய் இனத்தவரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இந்நாட்டின் அடிப்படைக் கொள்கைகளையும் அரசியலமைப்பையும் நாம் உண்மையாகவே மதித்து நடந்தால், இந்த நல்லிணக்கத்தைக் கட்டாயம் பாதுகாக்க வேண்டும்.” என்று, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
முன்னதாக நேற்று (செப்டம்பர் 17), நெகிரி செம்பிலான் ஆட்சியாளரான துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரை பதவியிலிருந்து நீக்குவதற்கோ அல்லது காலி செய்வதற்கோ நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருக்கோ அல்லது மாநிலச் செயற்குழுவிற்கோ (EXCO) தன்னிச்சையான அதிகாரம் எதுவும் இல்லை என்று அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (AGC) தெளிவுபடுத்தியிருந்தது.அத்தகைய அறிவிப்புகளின் செல்லுபடியாகும் தன்மையும் சட்ட விளைவுகளும், 1959-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சட்டச் செயல்முறைகள் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



