நீர் சேமிப்பில் சமூகப் பங்கேற்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அதனை ஒரு தேசிய முன்னுரிமையாக மாற்றுவதில் பிரதமரின் அசைக்க முடியாத உறுதியைப் பிரதிபலிக்கும் வகையில், ‘நீர் சேமிப்பு மக்கள் பங்கேற்பு’ திட்டம் 2024 செப்டம்பர் 6 அன்று குஜராத்தின் சூரத் நகரில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
2024 ஏப்ரல் 1 முதல் 2025 மே 31 வரை செயல்படுத்தப்பட்ட நீர் சேமிப்பு மக்கள் பங்கேற்பு (ஜேஎஸ்ஜேபி) 1.0 திட்டம் குறைந்தபட்சம் 10 லட்சம் நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்புகளை அமைக்கும் இலக்கை விஞ்சியதோடு, நாடு முழுவதும் 27 லட்சத்திற்கும் அதிகமான செயற்கை செறிவூட்டல் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, குறைந்த செலவில், உள்ளூர் அளவிலான தலையீடுகள் மூலம், அதீத சுரண்டலுக்கு உள்ளான மற்றும் நெருக்கடியான மாவட்டங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டலை விரைவுபடுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி, ஜேஎஸ்ஜேபி 2.0 திட்டம் 2025 ஜூன் 1 அன்று தொடங்கப்பட்டது.
2026 மே 31-க்குள் குறைந்தபட்சம் ஒரு கோடி நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை அமைக்க வேண்டும் என்ற இலக்கிற்கு மாறாக, நாடு முழுவதும் 1.5 கோடிக்கும் அதிகமான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது, இலக்கைவிட 50 சவீதம் கூடுதலாகும்.
மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர் சேமிப்பு, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றிற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில், ஒவ்வொரு மழைக்காலத்தையும் நீர் சேமிப்பிற்கான ஒரு வாய்ப்பாக மாற்றுவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உள்ளூர் சூழலுக்குப் பொருத்தமான, குறைந்த செலவிலான தலையீடுகளை ஊக்குவிப்பதோடு, நீடித்த நீர் மேலாண்மை மூலம் பருவநிலை மீள்திறனை வலுப்படுத்துகிறது.
தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் தலைமையின் கீழ், நீர் சேமிப்பு ஒரு தேசிய முன்னுரிமையாகவும் மக்கள் இயக்கமாகவும் உருவெடுத்துள்ளது. ‘மழைநீரை சேமியுங்கள்’, ‘நீர் சேமிப்பு மக்கள் பங்கேற்பு ‘ போன்ற முன்னெடுப்புகள் மூலம், நீர் சேமிப்பை ஒரு துறை சார்ந்த திட்டத்திலிருந்து, சமூகப் பங்கேற்பு, அறிவியல் பூர்வமான திட்டமிடல், வளங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் இயக்கப்படும் ஒரு நாடு தழுவிய மக்கள் இயக்கமாக அரசு மாற்றியுள்ளது.
‘வளர்ச்சியடைந்த இந்தியா’ தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்லும் வேளையில், விவசாயத்தை வலுப்படுத்துவதற்கும், கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கு உதவி செய்வதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும், எதிர்கால சந்ததியினருக்காக நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கும், மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர்நிலைகளை மீட்டெடுத்தல், நீரைத் திறம்படப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள் இன்றியமையாதவையாகத் திகழும்.

