மக்களே இனி இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் பிளாஸ்டிக்கா மாற போகுது..!! மத்திய அரசு அறிவிப்பு..!!
இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர இருக்கின்றன. ரூபாய் நோட்டு பயன்பாடு தொடங்கியது முதலே பேப்பரில் அச்சடிக்கபப்ட்ட தாள்களை தான் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய முயற்சியாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசும் அனுமதி தந்துள்ளது.
மக்களவையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் தொடர்பாக எழுப்பபப்ட்ட கேள்விக்கு மத்திய நிதி துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி விளக்கம் தந்துள்ளார். அதில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் முறையில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் முயற்சியாக, 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை ‘பாலிமர்’ (பிளாஸ்டிக்) தாளில் அச்சிட்டு சோதனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என கூறியுள்ளார்.

பாலிமர் நோட்டுகள் பிளாஸ்டிக் போன்ற ஒரு வகையான நீடித்த உழைக்கக்கூடிய பொருளால் ஆனவை. இவை சாதாரண காகித நோட்டுகளை விட அதிக காலம் உழைக்கக்கூடியவை மற்றும் எளிதில் கிழிந்துபோகாது. இதனால் தான் சோதனை முயற்சியாக ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
முதல் கட்டமாக 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாறும் நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள காகித நோட்டுகள் திரும்ப பெறப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கும் அரசு விளக்கம் தந்துள்ளது. முழுமையாக அனைத்து ரூபாய் நோட்டுகளையும் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றும் திட்டம் இல்லை என கூறும் அரசு, தற்போதுள்ள காகித நோட்டுகளுடன் இவை கூடுதலாகவே புழக்கத்தில் இருக்கும் என கூறியுள்ளது.
தலா 100 கோடி எண்ணிக்கையிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட்டு சோதனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகு, இவை முழு அளவில் புழக்கத்திற்கு வரும். சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கக்கூடியவை மற்றும் அதிகம் நீடித்து இருக்கக்கூடியவை என நிரூபணம் ஆனதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் நோட்டுகளின் அறிமுகம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதிக்குமா என்ற கேள்விக்கு, இது ஆரம்பகட்ட ஆய்வு மட்டுமே என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு காகித நோட்டுகள் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள் என இரண்டுமே பொதுமக்களுக்கு இணையாக தொடர்ந்து செயல்படும் என கூறியுள்ளது.
அண்மையில் தான் ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்களை சர்வதேச அளவில் டெண்டர் கோரியிருந்தது. இதில் தேசிய பாதுகாப்பு கருதி கடுமையான விதிகள் விதிக்கப்பட்டன. இந்த தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் அரசு பாதுகாப்பு அனுமதியை பெற்றிருக்க வேண்டும். சீனா அல்லது பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த நோட்டுகளுக்கான மூலப்பொருட்களை சீனா, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எளிதில் சேதமடையாது. இதன் மூலம் ரூபாய் நோட்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் குறைந்து, நீண்ட கால அடிப்படையில் பணத்தை அச்சிடும் செலவு குறையும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது.

