Last Updated:
தமிழ்நாடு உடன் பேச்சுவார்த்தை நடத்தும்படியும், இல்லையெனில் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அதற்கு மத்திய அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கர்நாடகாவிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி கர்நாடகாவை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் தலைமையில் கர்நாடக மாநில அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
துணை முதலமைச்சர் பரமேஸ்வரா மற்றும் அமைச்சர்கள் என பலரும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு ஊடகங்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தமிழ்நாடு உடன் பேச்சுவார்த்தை நடத்தும்படியும், இல்லையெனில் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அதற்கு மத்திய அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கர்நாடகாவிடம் தெரிவித்ததாகக் கூறினார். மேலும் முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு பேச்சுவார்த்தைக்குச் செல்லவுள்ள நிலையில் மத்திய அமைச்சர் கூறிய கருத்து கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே காவிரியின் குறுக்கே கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு கர்நாடகா அரசு பிற மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில், பாமக தலைவர் அன்புமணி எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில்
காவிரி நதியின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேபோல, மேகதாது அணை தொடர்பாக 2019 ஆம் ஆண்டு கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கைக்கு இதுவரை மத்திய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் காவேரி நீர் ஒழுங்காற்று வாரியம் ஒப்புதல் வழங்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. சுதா எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுற்றுச்சுழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் பதில் அளித்துள்ளார்.
மேகதாது விவகாரம்: தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகாவிற்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தல்


