கோலாலம்பூர்:
கிள்ளானிலுள்ள பூலாவ் கெத்தாம் அருகே உள்ள ஒன் ஃபேதம் பேங்க் (One Fathom Bank) கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற படகு ஓட்டுநர் உட்பட 7 பேரைக் காணவில்லை என மலேசியக் கடலோரக் காவல் படை (APMM) தெரிவித்துள்ளது.
நேற்று காலை 8.20 மணியளவில் புறப்பட்டுச் சென்ற அந்தப் படகு, இரவு 8.30 மணிக்குள் காப்பாரில் உள்ள செமெந்தா படகுத்துறைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், திட்டமிட்டபடி அவர்கள் கரை திரும்பாததால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.
இன்று அதிகாலை 3.35 மணியளவில் MERS 999 அவசர உதவி எண் மூலமாக இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிலாங்கூர் மாநிலக் கடலோரக் காவல் படை இயக்குநர், கேப்டன் அப்துல் முஹைமின் முகமது சாலே தெரிவித்தார்.
தகவல் கிடைத்த உடனடியாக, அதிகாலை 3.40 மணிக்கு ரோந்துப் படகுகள் முடுக்கிவிடப்பட்டு, அதிகாலை 5.00 மணிக்கு அதிகாரப்பூர்வ தேடுதல் மற்றும் மீட்புப் பணி (CARILAMAT) தொடங்கப்பட்டது.
“கடல் வழியிலான தேடுதல் நடவடிக்கை 118.4 சதுர நௌடிகல் மைல் பரப்பளவிலும், வான் வழியிலான தேடுதல் 509.6 சதுர நௌடிகல் மைல் பரப்பளவிலும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாயமான 7 பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று அவர் சொன்னார்.
இத்தேடுதல் பணியில் மலேசியக் கடலோரக் காவல் படையுடன் இணைந்து வடக்கு கிள்ளான் மாவட்டக் காவல் துறை (IPD Klang Utara), துறைமுகக் கிள்ளான் கடல்சார் காவல் படை (Pasukan Polis Marin) மற்றும் சுங்கை பினாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (JBPM) ஆகியவை கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
மீட்புப் பணிக்காகக் கடலோரக் காவல் படையின் ‘Penggalang 1’ படகு, ‘CL415MP Bombardier’ சிறப்பு விமானம், கடல்சார் காவல் படையின் RH16 படகு மற்றும் தீயணைப்புத் துறையின் அலுமினியப் படகுகள் கடலில் களமிறக்கப்பட்டுள்ளன. மாயமான 7 பேரையும் மீட்கத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



