Gold: ரூட்டை மாத்திய தங்க நகை கடைகள்.. எல்லோருக்கும் ‘Bell’ அடிக்க ஆசையாம்.. அப்போ மக்களின் நிலைமை?!
90களில் வந்த நிஜாம் பாக்கு விளம்பரத்தை போல பெரியவர், சிறியவர் அனைவருக்கும், முக்கியமாக ஆண்கள், பெண்கள் பேதம் இல்லாமல் எல்லோருக்கும் பிடித்தமான ஓன்றாக இருக்கும் தங்கம், தற்போது வெறும் நகையாக மட்டும் அல்லாமல் பாதுகாப்பான முதலீடாக உள்ளது.
அதிலும் குறிப்பாக உலக நாடுகளின் ஜிடிபி 123 டிரில்லியன் டாலராக இருக்கும் வேளையில், கடன்களின் அளவு 230 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து 340 டிரில்லியன் டாலராக இருக்கிறது. இதற்கிடையில் ஏஐ மூலம் பொருளாதாரம் வேகமாக உயர்ந்தாலும் கடனுக்கு இணையான அளவீட்டை எட்ட முடியுமா என்பது பெரும் சந்தேகம்.

இப்படியிருக்கையில் தான் பத்திர சந்தை முதலீடு முதல் பங்குச்சந்தை, கிரிப்டோ முதல் அனைத்தும் ஆபத்து நிறைந்த சொத்தாக மாறியுள்ளது. இதனால் அமெரிக்கா முதல் இந்தியா வரை தங்கம், வெள்ளி மிக முக்கியமான சொத்தாக மாறி வருகிறது.
இதேவேளையில் பிற நாடுகளை போல் அல்லாமல் தங்கம் இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களாலும் எவ்வளவு விலை உயர்ந்தாலும், பிரதமரமே தங்கத்தை வாங்க வேண்டாம் என கூறினாலும் எல்லோரும் வாங்கும் சொத்தாக இருக்கும் காரணத்தால் தங்க நகைக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் அடிப்படையில் ஒட்டுமொத்த தங்க வர்த்தக எகோசிஸ்டமும் தற்போது முழு கார்ப்ரேட் துறையாக மாறி வருகிறது. அதாவது unorganized துறையில் இருந்து organized துறையாக மாறி வருகிறது. உதாரணமாக பல தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்கள் தற்போது ஒரு குடும்ப வர்த்தகமாக இருந்து ஒரு நிலையான கார்ப்ரேட் நிர்வாக கட்டமைப்பிற்குள் நுழைந்துள்ளது.
இதன் வரிசையில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபலமாக இருக்கும் உள்ளூர் நகை கடைகள் (சிறியதோ, பெரியதோ) ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் மணியை அடிக்க தயாராகியுள்ளது. ஐபிஓ வெளியிட வேண்டுமாயின் நிதி நிலை, வர்த்தக நிர்வாகத்தை பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும்.
பங்குச்சந்தைக்கு வர திட்டமிடும் போது நகை கடைகளின் நகை விற்பனையில் வெளிப்படை தன்மையில் துவங்கிய தங்கத்தின் தூய்மை வரையில் அனைத்தும் தர நிலை உயர்த்த வேண்டும். இதனால் மக்களின் நம்பிக்கையும், வர்த்தகமும் அதிகரிக்கும் வழிப்பிறக்கும்.
மேலும் ஐபிஓ வெளியிடு மூலம் கிடைக்கும் முதலீட்டை வர்த்தக விரிவாக்காத்திற்காக பயன்படுத்த முடியும் என்பதால் நாட்டில் பல உள்ளூர் நகைகடைகள் அடுத்த தனிஷ்க் நிறுவனமாக மாறும் இலக்கை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் தெலுங்கானவை சேர்ந்த தீபா ஜூவல்லர்ஸ், தென்னியாவில் முக்கிய வர்த்தக சந்தையாக கொண்டு இயங்கும் லலிதா ஜூவல்லர்ஸ் ஆகிய உள்ளூர் நகை கடை பிராண்டுகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வெற்றிக் கண்டுள்ளது. லலிதா ஜூவல்லர்ஸ் ஆகஸ்ட் மாத இறுதியில் பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பின்பு 20 நாளில் 36.13 சதவீதம் அதன் பங்கு விலை உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து நாடு முழுவதும் அடுத்தடுத்து பல நகை கடை பிராண்டுகள் ஐபிஓ இலக்காக கொண்டு தனது வர்த்தகத்தையும், நிர்வாகத்தையும் மேம்படுத்த துவங்கியுள்ளது.
சமீபத்தில் பங்குச்சந்தையில் நுழைவதற்காக சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மும்பையை தலைமையிடமாக கொண்டு 162 வருடமாக இயங்கி வரும் Tribhovandas Bhimji Zaveri Ltd (TBZ) நகை கடை நிறுவனத்தில் சுமார் 74.12 சதவீத பங்குகளை 1033 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது. இதேபோல் எஞ்சியுள்ள 26 சதவீத பங்குகளையும் வாங்க ஓப்பன் ஆஃபர் கொடுத்துள்ளது ஜிஆர்டி.
மேலும் Tribhovandas Bhimji Zaveri Ltd (TBZ) தொடர்ந்து பங்குச்சந்தையில் வர்த்தகமாகும், இதை தனியார் நிறுவனமாக மாற்றும் எண்ணம் இல்லை என்பதையும் தெளிவாக குறிப்பிட்டு உள்ளது.
இப்படி பல நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடவும், நுழையவும் பல்வேறு முயற்சியகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் மூலம் அடுத்த 10 வருடத்தில் உங்களுடைய சொந்த ஊரில் சிறிய நகை கடைகளாக இருந்த பல பங்குச்சந்தையில் பார்க்க முடியும். இதனால் தங்க தொடர்பான முதலீட்டில் ஆர்வம் கொண்ட முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய கூடுதலான ஆஃப்ஷன் கிடைக்க உள்ளது.

