International
oi-Vigneshkumar
ஜெனிவா: அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தை முதலில் தோல்வியிலேயே முடிந்தது. அமெரிக்கா பிரதிநிதிகள் வந்து காத்திருந்த சூழலில், ஈரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் கிளம்பிவிட்டது. அப்போது அங்கு என்ன நடந்தது.. ஈரான் தரப்பு இதுபோல அதிருப்தி அடைய என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்கா ஈரான் இடையே பல மாதங்களாக நிலவிய மோதல் ஒருவழியாக முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தான சூழலில், நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்குப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ந்தப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நிலையில், அங்கு நடந்த நிகழ்வுகள் சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமைதி பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யும் இந்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கக் குழுவிற்குத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமை தாங்கினார். வழக்கமாக ஒரு சர்வதேசப் பேச்சுவார்த்தையில் தங்களை மிகவும் பலமான தரப்பாகக் கருதும் நாடே கடைசியாக அரங்கிற்குள் நுழையும். இது ஒரு வகையான அதிகாரத்தைக் காட்டும் செயலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த முறை ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கக் குழுவினர் முதலிலேயே அரங்கிற்குள் நுழைந்து, காத்திருந்தனர்.
காத்திருந்த அமெரிக்கா
அதாவது எப்போதும் பேச்சுவார்த்தையில் எதிர்த் தரப்பு உள்ளே நுழைந்து காத்திருக்கும். கடைசியாகவே அமெரிக்கா தரப்பு உள்ளே வரும். ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக இருந்தது. அமெரிக்கத் துணை அதிபர் தலைமையிலான டீம் உள்ளே வந்து காத்திருந்தது. இது அங்கு விசித்திரமான சூழலாகத் தெரிந்தது. அமெரிக்காவிடம் பவர் இல்லையா என்ற கேள்வியையும் இது எழுப்புவதாகவே இருந்தது.
அமெரிக்கக் குழுவினர் வந்த சிறிது நேரத்திற்கு பிறகே ஈரான் நாட்டுப் பிரதிநிதிகள் அங்கு வந்து சேர்ந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மத்தியஸ்தராகச் செயல்பட்டார். ஈரான் குழுவினர் ஷெரீப்பிற்கு கை கொடுத்தனர்.. அப்போது அவர்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
வந்த வேகத்தில் கிளம்பிய ஈரான்
சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்கள் தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், அத்தகைய சூழலில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் அவர்கள் கூறிவிட்டு கிளம்பிவிட்டனர். அதாவது லெபனான் விவகாரம் தொடர்பாக டிரம்ப் சில கருத்துகளை கூறியிருந்தார். அந்த கருத்துகள் தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லி, ஜே.டி. வான்ஸைச் சந்திக்காமலேயே ஈரான் குழுவினர் அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியேறினர்.
இதைப் பாகிஸ்தான் தரப்பு சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஈரான் எடுத்த இந்தத் திடீர் முடிவால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மிகுந்த பதற்றமடைந்தார். நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த அவர், உடனடியாக பீல்ட் மார்ஷல் முனீரை பார்த்தார். ஈரான் தரப்பை பேச்சுவார்த்தைக்கு வரச் சம்மதிக்க வைக்குமாறு கேட்பது போலப் பார்த்தால். ஆனால், அந்தச் சூழலில் முனீரால் கூட எதையும் செய்ய முடியவில்லை. அவரும் அதிர்ச்சி அடைந்து நின்றார்.
ஏமாற்றம்
சற்று தொலைவில் இருந்த ஜே.டி. வான்ஸ் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். இருப்பினும், அவருக்கும் கூட என்ன நடந்தது என்பது புரியவில்லை. ஷெரீப் மற்றும் முனீரிடம் வந்து, ஈரான் குழுவினர் ஏன் திடீரென வெளியேறினார்கள் என்பதை வான்ஸ் கேட்டறிந்தார். ஈரான் தரப்பு பேச்சுவார்த்தையை நிராகரித்துவிட்டுச் சென்றதை வான்ஸிடம் விளக்கிக் கூறினர். இப்படி முதல் மீட்டிங்கே தோல்வியில் முடிந்தது.
இருப்பினும், பேச்சுவார்த்தை முழுமையாக முடியவில்லை கூறப்படுகிறது. ஈரான் தரப்பு மீண்டும் வந்து முதல் ரவுண்டு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்தனர். இதில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

