Tamilnadu
oi-Vishnupriya R
பழனி: பழனி அருகே மற்றொரு கோயிலில் ரூ 2 கோடி மதிப்பிலான நில மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி நிலத்தை ரூ 2 கோடிக்கு மோசடி செய்யப்பட்ட வழக்கின் அதிர்ச்சியே இன்னும் போகாமல் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பழனி அருகே கிழக்கு ஆயக்குடியில் கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்துக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ 2 கோடியாகும். ஆனால் இதை வெறும் ரூ. 9 லட்சத்திற்கு முறைகேடான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பத்திரப்பதிவையும் ஜஸ்டின் மணிகண்டனே பதிவு செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. அதிலும் ரூ 100 கோடி நிலம் பத்திரப்பதிவான அதே நாளில் அம்மன் கோயில் நிலத்திற்கு மோசடி செய்து பத்திரப்பதிவு நடந்ததாக சொல்லப்படுகிறது.
கிழக்கு ஆயக்குடியில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக ஏராளமான நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் சுவாமி வழிபாட்டுக்கு சொந்தமான நிலையில் தனியாருக்கு விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இடங்களை விற்கக் கூடாது என அறநிலையத் துறை, பத்திரப்பதிவு துறைக்கு அறிவுறுத்திய நிலையில் அதையும் மீறி கடந்த மாதம் 7ஆம் தேதி இந்த நிலம் தனி நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பழனி 100 கோடி நில மோசடியில் ஈடுபட்டதாக சொல்லப்படும் ஜஸ்டின் மணிகண்டனே இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் ரூ 100 கோடி நில வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் உள்ள ஜெயபிரகாஷ் என்ற எழுத்தர்தான் இந்த அம்மன் கோயில் நில மோசடிக்கும் பத்திரம் தயாரித்து கொடுத்தது தெரியவந்துள்ளது.
இந்த இரு நிலங்கள் மட்டுமில்லை, பழனியில் ஏராளமான நிலங்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
பழனி தண்டாயுத பாணி சுவாமி மடத்திற்கு சொந்தமாக 1.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த மாதம் 6ஆம் தேதி தனிநபர்கள் பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதாவது ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ 2 கோடிக்கு வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக பழனி மலையடிவார போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் பத்திரப்பதிவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்தது.
மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பழனி சார்பதிவாளர்கள் இந்த நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய மறுத்து அவர்கள் விடுப்பில் சென்றனர். இதனால் கொடைக்கானலில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டினை பழனி அலுவலகத்திற்கு அழைத்து வந்து முறைகேடான பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஜஸ்டின் மணிகண்டனிடம் 7 நாட்களாக விசாரணை நடத்தியதை அடுத்து அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இதுவரை முருகதாஸ் (நிலத்தை விற்றவர்), வெள்ளைத்துரை, சேதுபதி (இருவரும் நிலத்தை வாங்கியவர்கள்), அன்வர்தீன் (பத்திரத்தை தயாரித்தவர்) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் அன்வர்தீன் உடல்நலக் குறைபாடால் சிறையிலேயே மரணம் அடைந்தார். ஜஸ்டின் மணிகண்டன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

