கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், 2025-ஆம் ஆண்டிற்கான கூட்டரசு அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை தொடர்பான தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (LKAN 2/2026) உட்படப் பல்வேறு முக்கிய அறிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இன்று கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா புக்கிட் துங்குவில் மாமன்னரைச் சந்தித்த தலைமைத் தணிக்கை அதிகாரி டத்தோஸ்ரீ வான் சுராயா வான் முகமது ராட்ஸி, இந்த அதிகாரப்பூர்வ தணிக்கை அறிக்கைகளைச் சமர்ப்பித்தார்.
இதில் 2025-ஆம் ஆண்டின் கூட்டரசு அரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கை மற்றும் கூட்டரசு அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் தொடர்பான தணிக்கை அறிக்கை, மாநில அரசாங்கங்கள், மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்த தணிக்கை அறிக்கைகள் ஆகிய அனைத்து அறிக்கைகளும் மாமன்னரின் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.
நாட்டின் நிதி நிர்வாகம், நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் காட்டி வரும் தீவிர அக்கறைக்கு ஏற்ப, சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை மாமன்னர் நேரில் ஆராய்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



