
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதுடன், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகமை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி அவரை துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளைத் தொடங்கிய இலங்கை – ராகமை பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதுடன், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகமை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ராகமை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பிரதான பெண் சந்தேகநபர் மற்றும் 20, 21, 22, 23 வயதுகளைக் கொண்ட ராஜாங்கனை, கடவத்தை, ராகமை மற்றும் திருகோணமலை சீனக்குடா பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று (18) வெலிசர நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடரப்படுகின்றன.

