Last Updated:
பிரியங்காவின் நகைச்சுவையான பதிலைக் கேட்டு அமித் ஷா கோபப்படவில்லை, மாறாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான மக்களவை விவாதத்தின் போது, ராகுல் காந்தி தனது சகோதரியைப் பாராட்டியது சபையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றியபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சிரிக்க வைத்தது தன்னால் ஒருபோதும் செய்ய முடியாத ஒன்று என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை 2029 தேர்தலில் அமல்படுத்துவதற்காக, அரசியலமைப்பு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. இது தொடர்பாக மத்திய அரசு தயார் செய்த அரசியலமைப்பு சட்டம் 131ஆவது திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை கமிஷன் அமைக்கும் மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய மூன்றை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், கடந்த வியாழக்கிழமை கூடியது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாத்தின் போது நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று பேசிய போது, “எனது கடந்த 20 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் என்னால் செய்ய முடியாத ஒன்றை, நேற்று என் சகோதரி ஐந்து நிமிடங்களில் செய்து காட்டினார். அமித் ஷாவை சிரிக்க வைத்தார்,” என்று ராகுல் காந்தி மக்களவையில் கூறினார். மேலும் , “அது நானும் பயிற்சி செய்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. ஒரு சகோதரனாக நான் மிகவும் பெருமைப்பட்டேன்,” என்றும் குறிப்பிட்டார்.
#WATCH | “Prime Minister and myself don’t have that wife issue…,” says LoP, Lok Sabha, Rahul Gandhi on a light-hearted note during the special session of Parliament on women’s reservation and delimitation. pic.twitter.com/ZVdPvRalFz
— ANI (@ANI) April 17, 2026
முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரியங்கா காந்தி “உள்துறை அமைச்சர் சிரிக்கிறார். அவர் எல்லாத் திட்டங்களையும் தயாரித்துவிட்டார். சாணக்கியர் இன்று உயிரோடு இருந்திருந்தால், உங்கள் அரசியல் தந்திரங்களைக் கண்டு அவரும் வியந்திருப்பார்.” பிரியங்கா மீண்டும் சிரித்துக்கொண்டே, “அவர் எல்லாத் திட்டங்களையும் தயாரித்துவிட்டு இப்போது சிரிக்கிறார். அவர் என் கருத்துடன் உடன்படுகிறார்,” என்று தெரிவித்து இருந்தார்.
பிரியங்காவின் நகைச்சுவையான பதிலைக் கேட்டு அமித் ஷா கோபப்படவில்லை, மாறாகச் சிரித்துக் கொண்டிருந்தார். இது சபை முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி தனது உரையில் இந்தச் சம்பவத்தை எடுத்துரைத்தார்.
இதனிடையே அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்பட்ட சூழலில், மொத்தம் 528 உறுப்பினர்கள் பங்கேற்றனர். மசோதா நிறைவேற 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்ததால் 54 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா தோல்வி அடைந்தது. அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா தோல்வியடைந்த நிலையில், தொகுதி மறுவரையறை மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பபடவில்லை.
பிரியங்கா அமித் ஷாவை சிரிக்க வைத்தார்.. கடந்த 20 ஆண்டுகளில் என்னால் கூட செய்ய முடியாத ஒரு காரியம் இது.. ராகுல் காந்தி


