தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சுயாதீனமாக செயல்படாமை காரணமாக தொடர்ந்தும் அந்தக் கூட்டங்களில் பங்களிப்பு செய்வது அர்த்தமற்ற விடயம் என கருதியே கூட்டத்துக்கு செல்லவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (06.05.2026) நடைபெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் கலந்து கொள்ளாதது தொடர்பில் விளக்கம் அளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
சட்டத்தரணிகள் பேரவைக்கும் அழைப்பு
அந்த சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தமிழரசுக் கட்சியும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் அதில் பங்கேற்கவில்லை.

பின்னர், கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஏற்பாடு செய்த கலந்துரையாடலுக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் மூவர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த சந்திப்பின் போது, தமிழரசு கட்சி சுமந்திரன் நிபுணர் குழு சார்பில்
இருவரை அழைப்பதற்கு தீர்மானம் எடுக்க வேண்டும் என பெயர்களை குறிப்பிட்டு
அனுமதி கேட்டிருந்தார்.
எமக்கான அழைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆக விடுக்கப்பட்ட நிலையில்
அதில் தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கினோம் நாங்கள் தமிழ் தேசிய பேரவையாக
பங்காளி கட்சிகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களுக்குமான
அழைப்பை விடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம்.
Zoom ஊடாக கலந்துகொள்ள அனுமதி
குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது கலந்துரையாடலுக்கு சில மணித்தியாலங்கள் முன்பதாக அனுமதி தரலாம் என சட்டத்தரணிகள் பேரவை தெரிவித்தது.

அனைவரும் உடனடியாக கொழும்புக்கு வர முடியாத சூழலில் Zoom ஊடாக கலந்துகொள்ள அனுமதி கோரியதாகவும், தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அதற்கு இணக்கம் தெரிவித்தபோதும், தமிழரசுக் கட்சி அதனை ஏற்க மறுத்தது.
எமது சிவில் அமைப்புகளை இணைக்க வேண்டிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டபோதும், சுமந்திரன் கோரிய நிபுணர் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது பக்கச்சார்பான நடவடிக்கையாகும்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு
மேலும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ள தமிழ் கட்சிகளுக்கான கூட்டம் எனக் கூறிவிட்டு, பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளையும் அழைத்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் திம்பு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சமஷ்டி தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இரண்டு கூட்டங்களிலும் பங்கேற்றோம்.
ஆனால் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி சிலர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானது என்பதால், அவர்களையும் இணைத்து செயல்படுவது அவசியம்.
தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சுயாதீனமாக செயல்படவில்லை என்ற காரணத்தால் தொடர்ந்தும் அந்த கலந்துரையாடல்களில் பங்கேற்பது அர்த்தமற்றதாக கருதப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

