கிராண்ட்ஸ்லாம் தொடர் வருமானத்தில் அதிக பங்கு வேண்டும். இல்லையெனில் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என சபலென்கா தெரிவித்துள்ளார். பிரெஞ்ச் பொது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் ஜூன் 7இல் பாரிசில் நடக்க உள்ளது. இதன் மொத்த பரிசுத்தொகை இம்முறை ரூ. 678 கோடியாக உயர்த்தப்பட்டது. ஒற்றையர் பிரிவில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 31 கோடி, இரண்டாவது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 15 கோடி பரிசு கிடைக்கும்.
ஆனால், இதற்கு டென்னிஸ் உலகின் ’நம்பர்-1’ இடத்திலுள்ள வீரர் சின்னர் (இத்தாலி), வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்) உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2025இல் பிரெஞ்ச் பொது தொடரின் மொத்த வருமானம் ரூ. 4,404 கோடி. இது 2024ஐ விட 14 விழுக்காடு அதிகம். ஆனால் பரிசுத்தொகை 5.4 விழுக்காடுதான் உயர்த்தப்படுகிறது. வீரர், வீராங்கனைகளுக்குத் தரப்படும் வருமான பகிர்வு, 2024இல் 15.5%இல் இருந்து 2026இல் 14.9%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2026இல் வருமானம் ரூ. 4,460 கோடியாக அதிகரிக்கும் நிலையில் வருமானத்தில் கூடுதல் பங்கு பென்சன் வழங்க வேண்டும்.
இல்லையெனில் ஏ.டி.பி., டபிள்யு.டி.ஏ. தொடர்களுடன் கிராண்ட்ஸ்லாம் தொடரையும் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சபலென்கா, எங்களைப் போன்ற வீரர், வீராங்கனைகள் இல்லாமல் போட்டியும் நடக்காது ரசிகர்களுக்கு பொழுதுபோக்கும் இருக்காது. எங்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். இது நிறைவேறாத பட்சத்தில் தொடரைப் புறக்கணிப்போம். நமது உரிமைகளுக்காக போராடுவதற்கு இதுதான் ஒரே வழி என்றார். போலந்தின் இகா சீவியாடெக் கூறுகையில், பிரெஞ்ச் பொது நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொடருக்கு முன் இதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் மற்றபடி தொடரைப் புறக்கணிப்பது என்பது அதிகபட்ச முடிவு’ என்றார்.




