Last Updated:
ஆபரேஷன் சிந்தூர் முதலாம் ஆண்டு நினைவை நாடு முழுவதும் உள்ள மக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகக் கொண்டாடி வருகின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் அதிரடி நடவடிக்கை ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் அதன் நினைவாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கங்களில் முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoJK) உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்காக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்து இன்றுடன் (மே 7, 2026) ஓராண்டு நிறைவடைகிறது.
இதனைச் சிறப்பிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) சமூக வலைதளக் கணக்கின் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார். புதிய படத்தில் கருப்பு நிறப் பின்னணியில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற எழுத்துக்களுடன் இந்திய தேசியக் கொடி இடம்பெற்றுள்ளது. பிரதமரைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் முப்படைகளின் தளபதிகளும் தங்களது சமூக வலைதளக் காட்சிப் படங்களை மாற்றி ராணுவத்தின் வீரத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார். 2025-ஆம் ஆண்டு பஹல்காமில் அப்பாவி இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, இந்தத் தாக்குதலின் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது படைகளின் அசாத்திய வீரத்திற்கு ஒட்டுமொத்த தேசமும் வணக்கம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ள பிரதமர், “ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டையும், தேசிய பாதுகாப்பைப் பேணுவதில் நமது அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் உலகிற்கு உணர்த்துகிறது” என்று பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
2025 மே 7 அதிகாலையில் தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளும் இணைந்து நடத்திய ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையாகும். இதன் மூலம் எல்லையிலிருந்த 9 முக்கிய பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இந்த நடவடிக்கை ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதன் முதலாம் ஆண்டு நினைவை நாடு முழுவதும் உள்ள மக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகக் கொண்டாடி வருகின்றனர்.


