Business
oi-Vigneshkumar
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த வாரம் கணிசமாக உயர்ந்தது. அமெரிக்காவில் வெளியான முக்கியமான வேலைவாய்ப்பு ரிப்போர்ட் தான் இந்த தங்கம் விலை ஏற்றத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் ரிப்போர்ட்டிற்கும் தங்கம் விலைக்கும் என்ன தொடர்பு.. வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிந்து வந்தது. வளைகுடா போர், கச்சா எண்ணெய் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தாறுமாறாக சரிந்தது. சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தங்கம் விலை
இருப்பினும், கடந்த வாரம் திடீரென யூடர்ன் போட்ட தங்கம் விலை மீண்டும் ஏற ஆரம்பித்தது. சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறி வருகிறது. அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு ரிப்போர்ட் தான் அதற்கு முக்கிய காரணம். அங்கு இப்போது வேலைவாய்ப்பு சிறப்பாக இல்லை. இந்த நேரத்தில் அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே தங்கத்தின் விலை உயர்கிறது.
காரணம்
அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களின் வருவாய் விகிதம் குறைந்ததும், அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தும் வருகிறது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றமும் தங்கத்தின் விலை உயர காரணமாக அமைகிறது. இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், “தங்கம் மற்றும் வெள்ளி இந்த வாரத்தில் கணிசமாக ஏறியுள்ளன. முதலில் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியது. அது தங்கம் விலை சரியலாம் என்ற சிக்னலை கொடுத்தது. ஆனால், அமெரிக்க வேலைவாய்ப்பு ரிப்போர்ட் வெளியான பிறகு நிலைமை மாறியது” என்றார்.
தங்கம் விலை கடந்த 7 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டிருந்தது. ஒரே வாரத்தில் மட்டும் 8 சதவீதத்துக்கும் அதிகமாக தங்கம் விலை உயர்ந்திருந்தது. அதேபோல வெள்ளியும் 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மற்றும் வேலைவாய்ப்பு டேட்டா ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே தங்கம் விலை இருக்கும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க வேலைவாய்ப்பு ரிப்போர்ட்
தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க வேலைவாய்ப்பு ரிப்போர்ட் தான் முக்கிய காரணமாக இருந்தது. கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக 23,000 வேலைவாய்ப்புகள் இழந்தது. அதாவது வேலைவாய்ப்பு டேட்டை எதிர்பார்த்ததை விட மிக மோசமாக இருந்தது. இதனால் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை மந்தமடைந்து வருவதாக முதலீட்டாளர்கள் கருதினர்.
இன்னொரு பக்கம் ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே ஹார்முஸை மீண்டும் திறப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த ஒப்பந்தம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதிகள் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உருவாகும்.
கச்சா எண்ணெய்
இது குறித்து என்ரிச் மணி நிறுவனத்தின் நிபுணர் அனுஜ் குப்தா கூறுகையில், “கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் மற்றும் டாலர் மீது பிரஷர் ஏற்படும். கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும்பட்சத்தில் பணவீக்கம் கட்டுக்குள் வரும். அப்போது அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு குறையலாம்” என்றார்.
அதாவது அமெரிக்க பொருளாதாரம் சற்று மோசமாக இருப்பதால் செப்டம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க பெடரல் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு குறைவு என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். எப்போதுமே வட்டி விகிதம் உயர்த்தப்பாடாமல் இருந்தால் தங்கம் விலை உயரும். அதுதான் இப்போதும் நடப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
என்ன செய்ய வேண்டும்
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்க பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து, விலை ஏறியுள்ளது. அதேநேரம் அடுத்து நடக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு ரொம்பவே முக்கியம். அதில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் தங்கம் விலை தானாக குறையும்! எனவே, இப்போதைக்கு விலை குறையும்போது தேவையான தங்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதே சரியான யுக்தியாக இருக்கும் என்கிறார்கள்!
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!




