சத்தமில்லாமல் ரூ.299 ரீசார்ஜ் பிளானை நீக்கிய ஏர்டெல்! இனி ரூ. 349-க்கு தான் ரீசார்ஜ் பண்ணனும்!
சமீபகாலமாக முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் ரூ. 299 என்ற ரீசார்ஜ் பிளானை சத்தமில்லாமல் தங்களுடைய இணையதளம் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்-பில் இருந்து நீக்கியுள்ளது. இந்த பிளான் அறிமுகம் செய்யப்பட்டு 1 வருடமே ஆன நிலையில் திடீரென இந்த முடிவை ஏர்டெல் நிறுவனம் எடுத்துள்ளது. இதுவரையில் ஏர்டெல்லின் குறைந்தபட்ச ரீசார்ஜ் பிளானாக இருந்து வந்த ரூ.299-க்கு பதிலாக இனி ரூ.349 பிளான் இருக்கும்.
ரூ. 299 பிளானில் என்னென்ன வசதிகள் கிடைத்தது?: ரூ. 299 ரீசார்ஜ் பிளான் மூலம் பயனர்கள் 28 நாட்கள் வேலிடிட்டி, தினசரி அடிப்படையில் 1 ஜிபி (4ஜி/5ஜி) டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி, தினசரி 100 எஸ்எம்எஸ் வசதி, இலவசமாக காலர் டியூன் வைக்கும் வசதி மற்றும் பெர்ப்ளெக்சிட்டி புரோ AI சப்ஸ்கிரிப்ஷன் போன்ற வசதியைப் பெற்றனர்.

இப்போதுள்ள குறைந்தபட்ச பிளான்கள் என்னென்ன?:
ரூ. 349 ரீசார்ஜ் பிளான்: ரூ. 299 பிளானை ஏர்டெல் நிறுவனம் நிறுத்தியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச பிளானாக ரூ. 349 பிளான் மாறியுள்ளது. இந்த ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி 28 நாட்கள். தினசரி அடிப்படையில் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி, தினமும் 100 எஸ்எம்எஸ் வசதி, 6 மாதத்திற்கு இலவசமாக ஆப்பிள் மியூசிக் பயன்படுத்தும் வசதி, ஏர்டெல் ஹலோ ட்யூன்ஸ் மற்றும் 12 மாதம் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் போன்ற பிற சலுகைகளும் கிடைக்கிறது.
ரூ. 399 ரீசார்ஜ் பிளான்: 349 பிளானை போலவே இந்த பிளானுக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி, தினசரி அடிப்படையில் 2.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வசதி போன்றவை கிடைக்கிறது. இதற்கு கூடுதலாக 28 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனும் இலவசமாக பெறலாம்.
இது மட்டுமல்ல ஏர்டெல் நிறுவனம் ரூ. 579 மற்றும் ரூ. 619 போன்ற ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களையும் உத்தர்பிரதேஷம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிறுத்தியுள்ளதாக சஞ்சு சௌத்ரி என்ற எக்ஸ் பையனார் தெரிவித்திருக்கிறார். இதே நடவடிக்கை விரைவில் மற்ற பகுதிகளிலும் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இன்னும் ஏர்டெல் இணையதளத்தில் இந்த இரண்டு பிளான்களும் இருக்கிறது. ஒருவேளை டெஸ்டிங் ப்ராசஸுக்காக ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டங்களை நிறுத்தி உள்ளதா? அல்லது உண்மையிலேயே இனி இந்த இரண்டு பிளான்களும் கிடைக்காதா? என்பது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரியவரும்.

