Last Updated:
Vaibhav Sooryavanshi ஃபார்ம் மற்றும் ஸ்டிரைக்-ரேட் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, சீனியர் வீரர்களைத் தவிர்த்து இந்த அதிரடி அணியை பத்ரிநாத் உருவாக்கியுள்ளார்
முன்னாள் சிஎஸ்கே வீரரும், தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சுப்பிரமணியம் பத்ரிநாத், நடப்பு ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இந்த சீசனின் ‘சிறந்த பிளேயிங் 12’ அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
பெங்களூருவில் இன்று நடைபெறவிருக்கும் குவாலிஃபையர் 1 (Qualifier 1) போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதவுள்ள நிலையில், பத்ரிநாத் வெளியிட்டுள்ள இந்த அணி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அணியில் மிக முக்கிய ஆச்சரியமாக, ஐபிஎல் வரலாற்றில் 9200 ரன்களுக்கு மேல் குவித்து, நடப்பு சீசனிலும் 14 போட்டிகளில் 557 ரன்கள் (1 சதம், 4 அரைசதங்கள்) விளாசியுள்ள ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷிக்கு பத்ரிநாத் வாய்ப்பளித்துள்ளார். சூர்யவன்ஷி இந்த சீசனில் 232.2 என்ற அசுர வேக ஸ்டிரைக்-ரேட்டில் 583 ரன்கள் குவித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
அணியின் தொடக்க வீரர்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் (616 ரன்கள்) மற்றும் நடப்பு சீசனில் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ள தமிழக வீரர் சாய் சுதர்சன் (638 ரன்கள்) ஆகியோரை பத்ரிநாத் தேர்வு செய்துள்ளார். இவர்களுடன் மிடில் ஆர்டரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசன் (606 ரன்கள்) மற்றும் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் (393 ரன்கள்) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஆர்சிபியின் குருணால் பாண்டியா மற்றும் கேகேஆர் அணியின் சுனில் நரைன் ஆகிய இரு சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை, இந்த சீசனின் முன்னணி விக்கெட் வேட்டையர்களான புவனேஷ்வர் குமார் (24 விக்கெட்டுகள்), காகிசோ ரபாடா (24 விக்கெட்டுகள்) மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் (21 விக்கெட்டுகள்) ஆகிய மூவரையும் பத்ரிநாத் தேர்வு செய்துள்ளார்.
அணியின் கடைசி வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு எல்எஸ்ஜி அணியின் பிரின்ஸ் யாதவ் (16 விக்கெட்டுகள்) அல்லது கேகேஆர் அணியின் கார்த்திக் தியாகி (18 விக்கெட்டுகள்) ஆகிய இருவரில் ஒருவருக்கு பத்ரிநாத் வாய்ப்பு தந்துள்ளார்.
மேலும், சிஎஸ்கே அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன் இந்த அணியின் ‘இம்பாக்ட் சப்ஸ்டிடியூட்’ வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய ஃபார்ம் மற்றும் ஸ்டிரைக்-ரேட் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, சீனியர் வீரர்களைத் தவிர்த்து இந்த அதிரடி அணியை பத்ரிநாத் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


