Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் முடிவுக்கு வந்துவிட்ட சூழலில், அவரின் மகள் காந்திமதி என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கேற்ப புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் காந்திமதி மற்றும் முகுந்தன் இருவரும் சந்திப்பு நடத்தி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் பாமகவில் நிலவி வந்த உட்கட்சி பூசலும் முடிவுக்கு வந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் இடையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இதனிடையே நேற்று ராமதாஸ் தனது 89வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவர் அரசியல் இருந்து துறவறம் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

அரசியல் பணிகளை அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார். இது ராமதாஸ் மகள் காந்திமதிக்கு ஏற்புடையதாக இல்லை. கடந்த சில நாட்களாகவே காந்திமதி அதிருப்தியில் இருந்து வந்தார். ஏனென்றால் சட்டசபைத் தேர்தலின் போது காந்திமதி வசம் தான் பொறுப்புகள் இருக்கும் என்று ராமதாஸ் கூறி இருந்தார். ஆனால் திடீரென காந்திமதிக்கு எந்தவித பொறுப்பும் கொடுக்காமல் விலக்கி வைத்திருக்கிறார்.
இதனால் அதிருப்தி அடைந்த காந்திமதி அடுத்தக்கட்ட அரசியல் பணிகளை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் நேற்று என்ஆர் காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமியை, காந்திமதி மற்றும் அவரது மகன் முகுந்தன் இருவரும் சந்தித்துள்ளனர். இதனால் என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருவரும் இணையக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
நீண்ட காலமாகவே என்ஆர் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் விரிவுபடுத்த வேண்டும் என்பதில் ரங்கசாமி தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் பேசியதாகவும் சொல்லப்பட்டது. இதன் மூலமாக புதுச்சேரியை ஒட்டிய வட மாவட்டங்களிலும் என்ஆர் காங்கிரஸ் கட்சியால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று பார்க்கப்படுகிறது.
இதனால் காந்திமதியை என்ஆர் காங்கிரஸ் தமிழக தலைமை பொறுப்புக்கு கொண்டு வர வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். வட மாவட்டங்களில் பாமகவுக்கு இருக்கும் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க காந்திமதி இந்த வியூகத்தை வகுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

