நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அண்மைக்காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து தெளிவுபடுத்தியபோதே நீதி அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிக்குமாறு தனக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாகவும், அதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் முன்வைக்கப்படும் யோசனை
இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பட்சத்தில், அது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளதாக கூறினார்.

அத்துடன் பொதுவாக எந்தவொரு வழக்கும் நீதிமன்றங்களில் கணிசமான காலம் தாமதிக்கப்படுகின்றது எனவும் இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, நமது நீதிமன்றக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
சில நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டிய அதேவேளை, தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தும் சமூகத்தில் நிலவுகின்றதாக அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

