Last Updated:
இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100% வரி விதிக்க அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிக்க அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நிறைவேறியது. இதற்கு நாட்டு மக்களின் நலனே முக்கியம் என இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது கடந்த நான்கு ஆண்டுகளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி வரும் அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்குத் தேவைப்படும் நிதியில் பெரும் பகுதி, பிற நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விற்பதன் மூலமே கிடைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். மேலும் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவும், சீனாவும் அதிக அளவிலான கச்சா எண்ணெய் வாங்குகின்றன.
இதனை தடுத்து நிறுத்தி ரஷ்யாவிற்கு பொருளாதார அழுத்தம் கொடுக்க கொண்டு வரப்பட்டது தான் Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026. இந்த மசோதா, ஏற்கனவே செனட் சபையில் 86-க்கு 11 என்ற வாக்குகளில் நிறைவேற்றப்பட்டிருந்தது. தற்போது பிரதிநிதிகள் சபையிலும் 262-க்கு 159 என்ற வாக்குகள் அடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த மசோதா தற்போது அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதிபர் கையெழுத்திட்டவுடன் அதிகாரப்பூர்வ சட்டமாக மாறும். சட்டம் அமலுக்கு வந்தாலும், இந்தியா மீது உடனடியாக 100% வரி தானாக நடைமுறைக்கு வராது. இந்தச் சட்டம் அதிபர் டிரம்பிற்கு வரி விதிப்பதற்கான அதிகாரத்தை மட்டுமே வழங்குகிறது. ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கினால், எவ்வளவு சதவீதம் வரி விதிக்கலாம் என்பதை அதிபரே முடிவு செய்வார்.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா, 140 கோடி இந்தியர்களுக்கும் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவை கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமை என்று தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப கச்சா எண்ணெய் வாங்கும் கொள்கை தொடரும் என்றும் இந்தியா கூறியுள்ளது.
தற்போது, இந்தியா இறக்குமதி செய்யும் மொத்தக் கச்சா எண்ணெயில் 30 சதவிகிதம் வரை ரஷ்யாவிடமிருந்தே பெறப்படுகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 20 லட்சம் முதல் 27 லட்சம் பேரல்கள் வரை ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வருகிறது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து சுமார் 40.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.
சர்வதேச அளவில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 2022-ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா தனது மொத்த தேவையில் 1 சதவிகிதம் மட்டுமே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த நிலையில், தள்ளுபடி விலையில் கிடைத்ததால் இந்தியாவின் இறக்குமதி பன்மடங்கு அதிகரித்தது. தற்போதும் இந்தியாவிற்கு அதிக அளவில் எண்ணெய் விநியோகிக்கும் முதன்மை நாடாக ரஷ்யா உள்ளது.


