Cricket
oi-Yogeshwaran Moorthi
லக்னோ: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் முகமாக உருவெடுத்து வரும் கேப்டன் சுப்மன் கில், தனது 26 வயதிலேயே 21 சர்வதேச சதங்களை விளாசி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 110 பந்துகளில் 2 சிக்ஸ், 22 பவுண்டரி உட்பட 154 ரன்களை விளாசி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் – ரோகித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்க வீரராக களமிறங்கும் சுப்மன் கில் நம்பர் 3 வரிசையில் களமிறங்கினார். ஜெய்ஸ்வால் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்த நிலையில், சுப்மன் கில் களம் புகுந்தார்.

தொடக்கம் முதலே பவுண்டரிகள் அடிப்பதில் தீவிரம் காட்டிய சுப்மன் கில் 38 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பின் அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 76 பந்துகளில் சதத்தை எட்டினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இதனால் சுப்மன் கில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த அதிரடி சதத்தின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 21-வது சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். 26 வயதில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவங்களிலும் சேர்த்து 21 சதங்களை சுப்மன் கில் விளாசி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 9 சதங்களும், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதத்தையும் சுப்மன் கில் அடித்துள்ளார்.
சிறப்பாக ஆடிய சுப்மன் கில் மொத்தமாக 110 பந்துகளை எதிர்கொண்டு 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 154 ரன்கள் குவித்தார். இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில், 154 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் புதிய ரன் மெஷினாக சுப்மன் கில் உருவெடுத்து வருகிறார்.
அதேபோல் ஒரு கேப்டனாகவும் சுப்மன் கில் இளம் வீரர்களுக்கும், சீனியர் வீரர்களுக்கும் மரியாதை அளித்து வருகிறார். இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக ரோகித் சர்மாவை பெஞ்ச் செய்யாமல், சுப்மன் கில் நம்பர் 3 வரிசைக்கு வந்தது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

