கோலாலம்பூர்:
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் (UNHCR) அடையாள அட்டையை மலேசியாவில் பணிபுரிவதற்கான முறையான ‘வேலை அனுமதிப் பத்திரம்’ என நினைத்து வேலை செய்துவந்த 28 வயது மியன்மார் பெண் உட்பட 197 வெளிநாட்டவர்கள் குடிநுழைவுத் துறையின் அதிரடிச் சோதனையில் கைது செய்யப்பட்டனர்.
இங்குள்ள பூலாவ் இண்டா பகுதியில் அமைந்துள்ள பேட்டரி தொழிற்சாலை ஒன்றில் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இன்று காலை 10.30 மணியளவில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது இவர்கள் பிடிபட்டனர்.
பிடிபட்ட ‘டிங்-டிங்’ என்ற மியன்மார் பெண் கூறுகையில், “தோழி ஒருவரின் உதவியால் கடந்த ஒரு மாதமாகத்தான் இந்தப் பேட்டரி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறேன். எனக்கு ஒரு நாளைக்கு RM80 சம்பளம் வழங்கப்படுகிறது என்றார்.
நான் தினமும் வேலை செய்வேன். விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடிக்கப்படும் என்பதால் தினமும் வேலைக்கு வருகிறேன். எனது வேலையே மோட்டார் சைக்கிள் பேட்டரி பாகங்களை ஒன்று சேர்ப்பதுதான். சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மியன்மாரில் உள்ள குடும்பத்திற்கு அனுப்பி வைக்கிறேன்,” எனக் கூறினார்.
மேலும், தான் கடந்த 10 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருவதாகவும், இதற்கு முன் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பல்வேறு கடைகளில் பணிபுரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
UNHCR அகதிகள் அட்டை என்பது மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை செய்வதற்கான அனுமதியோ, வேலைவாய்ப்பு உரிமமோ அல்லது கடப்பிதழோ அல்ல என்பதை குடிநுழைவுத் துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இன்றைய சோதனையில், செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாதது மற்றும் குடிநுழைவுச் சட்ட விதிகளுக்கு மாறாகப் பணிபுரிந்தது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 197 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



