‘சாந்தி’ (SHANTI – Securing Holistic Advancement through Norms, Trust and Integrity) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பரப்புரையின் மூலம், உலகளாவிய முடிவெடுத்தலில் ‘குளோபல் சவுத்’ (Global South) என்று அழைக்கப்படும் வளரும் நாடுகளுக்கு வலுவான குரல் மற்றும் முன்னுரிமை அளிப்பதை இந்தியா தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்தியா கடந்த 2021-22 ஆம் ஆண்டு தவணையில் இந்த தற்காலிக உறுப்பினர் பொறுப்பை வகித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்புப் பரப்புரை தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “நமது பொதுவான எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் குளோபல் சவுத் நாடுகள் இன்னும் கூடுதலான மற்றும் முக்கியமான பங்கைக் கொண்டிருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதங்களில் இந்த நாடுகளின் கவலைகள் மற்றும் தேவைகள் பிரதிபலிக்கப்படுவதை இந்தியா தனது முன்னுரிமையாகக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த UNSC தேர்தலுக்கான ஆசிய-பசிபிக் பிரிவில் உள்ள ஒரே ஒரு இடத்திற்கு இந்தியாவும் தஜிகிஸ்தான் நாடும் போட்டியிடுகின்றன. இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு (2027) ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
இந்த பரப்புரையின் ஒரு பகுதியாக, ஐநா பாதுகாப்புச் சபையில் இந்தியா பின்வரும் 6 முக்கிய அம்சங்களை முன்வைத்துச் செயல்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது:
சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தம்: பன்முகத்தன்மை கொண்ட உலகளாவிய அமைப்புகளில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தங்களை மேற்கொள்வது.
நவீன அமைதிப்படை: சிறந்த தொழில்நுட்பம், நடைமுறைக்கு சாத்தியமான உத்தரவுகள் மற்றும் ‘பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு’ திட்டத்தின்கீழ் பெண் அமைதிப்படையினரின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து ஐநா அமைதிப்படையை மேம்படுத்துவது.
பொறுப்பான செயற்கை நுண்ணறிவு (AI): தொழில்நுட்பத் துஷ்பிரயோகத்தைத் தடுத்து, மனிதநேய அடிப்படையிலான, அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை உறுதி செய்தல்.
கடல்சார் ஒழுங்குமுறை: சர்வதேசக் கடல் வழித்தடங்களில் விதிகளை மதிக்கும் திறந்த மற்றும் பாதுகாப்பான கடல்சார் ஒழுங்குமுறையைப் பேணுதல்.
பயங்கரவாத ஒழிப்பு: பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுவதைத் தடுப்பதற்கான சர்வதேச நடவடிக்கைகளைக் கடுமையாக்குவது.
பிராந்திய அமைதி: உக்ரைன் போர், காசா எல்லைப் பிரச்சனை மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் போன்ற உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது.
இந்த முக்கியப் பயணத்தின் ஒரு பகுதியாக அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸைச் சந்தித்துப் பேசவுள்ளார். முன்னதாக கடந்த 5 முதல் 10 ஆம் தேதி வரை கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய வளைகுடா நாடுகளுக்கு அவர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

