International
oi-Vishnupriya R
ரோம்: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தன்னுடன் போட்டோ எடுக்க கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்ததற்கு மறுப்பு தெரிவித்த மெலோனி, தானும் தனது நாடான இத்தாலியும் இதுவரை யாரிடமும் எதற்காக கெஞ்சியதில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே இப்போது கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான பெரிய அரசியல் மோதலாக மாறியுள்ளது.

“ஜி-7 மாநாட்டில் என்னோடு போட்டோ எடுக்க மெலோனி கெஞ்சினார்” என்று ட்ரம்ப் சொன்ன கருத்துதான் இந்த ஒட்டுமொத்தப் பிரச்சனைக்கும் காரணம். இதற்கு மெலோனி தந்துள்ள பதிலடி உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இத்தாலியின் ‘La7’ தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பேட்டி அளித்தார். அதில் இத்தாலி பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசியதே இந்த பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது.
டிரம்ப் பேசியது என்ன?
“மெலோனியிடம் பேச வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. நான் பேசியதே அவருக்கு சந்தோஷம்தான். ஜி-7 மாநாட்டில் என்னோடு ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கெஞ்சினார். எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவர் மேல் பரிதாபப்பட்டுத்தான் நான் போட்டோ எடுக்கச் சம்மதித்தேன்!”
மெலோனியின் அதிரடிப் பதில்!
டிரம்ப்பின் இந்தப் பேட்டி வெளியான சில மணி நேரங்களிலேயே, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ட்ரம்பைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மெலோனி கூறியது: “டொனால்ட் ட்ரம்ப் சொல்வது முற்றிலும் பொய். நான் அவருடன் போட்டோ எடுக்க அவரிடம் கெஞ்சியதாக கூறியதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அமெரிக்க அதிபர் ஏன் தன் சொந்த நட்பு நாடுகளிடம் இப்படி மோசமாக நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை.
உலக நாடுகளின் உண்மையான எதிரிகளிடம் பயந்துபோகும் டிரம்ப், தன் நட்பு நாடுகளிடம் வீரம் காட்டுவது வெட்கக்கேடானது. டிரம்ப் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். நானோ, என் இத்தாலி நாடோ யாரிடமும், எதற்காகவும் எப்போதும் கெஞ்ச மாட்டோம்!” என்றார்.
அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்த இத்தாலி அமைச்சர்!
இந்தச் சண்டை வெறும் பேச்சோடு நிற்காமல், இரு நாடுகளின் அரசு உறவையும் பாதித்துள்ளது. ட்ரம்பின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டோனியோ தாஜானி தனது அமெரிக்கப் பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.
அவர் அமெரிக்கா செல்லவிருந்த நிலையில், “அதிபர் டிரம்பின் மோசமான வார்த்தைகள் ஒட்டுமொத்த இத்தாலியையும் அவமானப்படுத்தியுள்ளன. அதனால், எனது அமெரிக்கப் பயணத்தை நான் ரத்து செய்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.
பிரதமருக்கு இத்தாலி அமைச்சர்கள் ஆதரவு
ட்ரம்பின் பேச்சுக்கு எதிராக இத்தாலியின் மற்ற அமைச்சர்களும் மெலோனிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
அமைச்சர் ஜியோவன்பாட்டிஸ்டா: “நட்புக் கூட்டணியை டிரம்ப் வேண்டுமென்றே அழிக்கிறாரா அல்லது அவருக்கு விபரம் தெரியாமல் செய்கிறாரா என்று புரியவில்லை. அவரின் இதுபோன்ற பேச்சுகள் அமெரிக்காவின் பெயரைக் கெடுக்கின்றன” என்றார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் கைடோ: “எதற்கும் பயப்படாத மெலோனி, ஒரு போட்டோவிற்காக யாரிடமும் கெஞ்ச மாட்டார். இதுபோன்ற மலிவான பேச்சுகள் யாருக்கும் நல்லது அல்ல” என எச்சரித்துள்ளார்.
Io e l’Italia non imploriamo mai. pic.twitter.com/sTpKlqWB67
— Giorgia Meloni (@GiorgiaMeloni) June 19, 2026
பின்னணி என்ன?
டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான போது மெலோனி அவருடன் நட்பாக இருக்கவே விரும்பினார். ஆனால், சமீபகாலமாக இருவருக்கும் இடையே விரிசல் அதிகமானது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஈரான் மோதலின் போது, அமைதியை வலியுறுத்திய போப் ஆண்டவரை (Pope) டிரம்ப் விமர்சித்தார். அப்போது போப் ஆண்டவருக்கு ஆதரவாக நின்ற மெலோனி, டிரம்பைக் கண்டித்தார். அதற்கு ட்ரம்ப், மெலோனியை “கோழை” என்று திட்டினார். அந்தப் பழைய கோபத்தில்தான் டிரம்ப் இப்போது இப்படிப் பேசியுள்ளார் என்று சர்வதேச அரசியல் அறிந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் டிரம்ப், உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். அப்படித்தான் கடந்த ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரை தான்தான் சுமூகமாக பேசி நிறுத்தினேன் என அப்பட்டமான பொய்யை தெரிவித்திருந்தார். இந்தியாவின் பதிலடிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பின்வாங்கியதே போர் நிறுத்தத்திற்கு காரணம் என்பதே உண்மை!

