Last Updated:
கிருஷ்ணகிரியில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை கடும் சரிவு. ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை. விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதன் காரணமாக சாகுபடிக்காக அதிக முதலீடு செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. எல்நினோ பருவநிலை மாற்றத்தால் நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற தகவலையடுத்து, குறுகிய காலத்தில் மகசூல் தரும் பயிராக கருதி ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர். எதிர்பார்த்ததை விட போதிய நீர் கிடைத்ததால் தக்காளி செடிகள் நன்றாக வளர்ந்து, தற்போது அதிகளவில் விளைச்சல் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், சூளகிரி மற்றும் ராயக்கோட்டை மார்க்கெட்டுகளுக்கு ஒரே நேரத்தில் அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டதால் விலை கடுமையாக சரிந்துள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும், 25 கிலோ கொண்ட ஒரு கிரேட் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையாளர்கள் பொதுமக்களை கவரும் வகையில் “5 கிலோ ரூ.50” என்ற விலையில் தெருவோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

