TCS, HCL: இந்திய ஐடி துறைக்கு தான் இனி கிங்மேக்கர்.. சும்மாயில்ல 38,00,000 கோடி ரூபாய் மார்கெட் திறக்கிறது!
செயற்கை நுண்ணறிவு தான் இந்திய ஐடி துறையின் அழிவு காலத்தின் ஆரம்பம் என பலரும் கூறுகையில், ஏஐ மூலம் எத்தகைய மாற்றத்தை இந்திய ஐடி துறை சந்திக்கப்போகிறது என்பதை நுவாமா ஆராய்ச்சி நிறுவனம் புட்டு புட்டு வைத்துள்ளது.
ஏஐ மூலம் பணிநீக்கம், வேலைவாய்ப்புகள் குறைவது, ஐடி நிறுவனங்களின் வருமானம் குறைவது, ஏஐ சேவைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிகப்படியான செலவினம் என பல விஷயங்கள் கூறப்பட்டாலும் இவை அனைத்தும் குறுகிய கால பாதிப்பே.

நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் இந்திய ஐடி துறை எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையப்போகிறது, இதன் மூலம் ஐடி நிறுவன பங்குகள் சரிவில் இருந்து மீண்டு வருவது மட்டும் அல்லாமல் பெரிய அளவில் உயரும் வாய்ப்பை கொண்டு உள்ளதாக நுவாமா ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏஐ மூலம் சில கோடிங், டெஸ்டிங், சப்போர்ட் மற்றும் இதர தொழில்நுட்ப வேலைகளை எளிதாகவும், நொடிப்பொழுதியிலும் செய்ய முடியும். இதனால் நிறுவனங்களுக்கு அதிகப்படியான ஊழியர்களின் தேவையும், அவசியமும் இருக்காது.
இக்காலக்கட்டத்தில் பணிநீக்கம் நடக்கலாம் ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் ஏஐ பயன்பாட்டை சிறிய அளவில் துவங்கினாலும் அதை பெரெய அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும், ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏஐ கட்டமைப்பை உருவாக்கி அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் ஐடி சேவை நிறுவனங்கள் முக்கியமாக உள்ளது.
ஜென் ஏஐ மூலம் இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்களுக்கு சுமார் 400 பில்லியன் டாலர் வர்த்தக சந்தைக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. அதாவது 38,13,600 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை வாய்ப்புகள் உள்ளதாக நுவாமா ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது.
ஒவ்வொரு நிறுவனமும் ஏஐ சேவையை தனது வர்த்தகத்தில் புகுத்த வேண்டும் என விரும்பினால் அந்த நிறுவனத்தின் டிஜிட்டல் கட்டமைப்பை முழுமையாக ஏஐக்காக மறுசீரமைப்பு செய்ய வேண்டும், தற்போதை வர்த்தகத்தை எவ்விதமான தகவல் கசிவு, சிதறல் இல்லாமல் இணைக்கும் ஏஐ கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
இவை அனைத்தும் சாதாரண ஒரு டெக் நிறுவனத்தால் செய்ய முடியாது, இத்துறையில் பல வருடம் அனுபவம் கொண்ட டெக் நிறுவனத்தால் மட்டுமே செய்ய முடியும் என்பதால் ஏஐ துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இந்திய ஐடி துறை நிறுவனங்கள் தான் அச்சாணியாக இருக்கப்போகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் டிசிஎஸ், ஹெச்சிஎல் ஆகிய முன்னணி ஐடி நிறுவனங்கள் ஏஐ துறையில் பெரும் வர்த்தகத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் 2வது காலாண்டு முடிவுகள் மிகவும் வலிமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி வரும் காலக்கட்டத்தில் உலகளாவிய நிறுழனங்கள் AI infrastructure, cloud computing, Software-as-a-Service (SaaS), Infrastructure-as-a-Service (IaaS), AI-agent technologies போன்றவற்றுக்கு அதிகளவில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிகிறது எனவும் நுவாமா கணித்துள்ளது. இதை டார்கெட் செய்து சேவை அளிக்கும் அனைத்து நிறுவனங்களும் பெரும் வர்த்தகத்தை இந்த ஏஐ காலத்தில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி 2030க்குள் இந்திய ஐடி நிறுவனங்களுக்கான வர்த்தக சந்தைக்கான வாய்ப்பு 300 – 400 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

