அலோர் ஸ்டார்:
கெடா மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் கோலா மூடா, குபாங் பாசு மற்றும் லங்காவியிலுள்ள பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில், சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 94 வெளிநாட்டினரைக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களின் தகவல்கள் மற்றும் புலனாய்வு விவரங்களின் அடிப்படையில், குடிவரவு விதிகளை மீறும் வெளிநாட்டினரைக் கண்டறிய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை சுங்கை பட்டாணி, கெபாலா பட்டாஸ், ஜித்ரா, புக்கிட் காயூ ஹிப்பாம் மற்றும் லங்காவியிலுள்ள 22 கட்டுமான இடங்கள், தங்குமிடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 227 பேர் சோதிக்கப்பட்டு, அதில் 84 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் உட்பட மொத்தம் 94 பேர் கைது செய்யப்படட்தாகவும் அது தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 45 பங்களாதேஷியர்கள், 26 மியன்மார் நாட்டவர்கள், 18 இந்தோனேசியர்கள் மற்றும் 5 பாகிஸ்தானியர்கள் அடங்குவர். 18 முதல் 59 வயதுக்குட்பட்ட இவர்கள், செல்லுபடியாகும் கடப்பிதழ் அல்லது விசா அனுமதி இல்லாமல் தங்கியிருந்தது மற்றும் விசா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், விசாரணைக்கு உதவுவதற்காகக் கட்டிட உரிமையாளர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு 6 சாட்சி அழைப்பாணைகள் (Form IMM.29) வழங்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக சிக், பெலாந்திக் மற்றும் லங்காவியிலுள்ள குடிநுழைவுத் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



