TCS நிறுவனமே இப்படி செய்யலாமா? அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்: இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் செய்த ஒரு செயல் லட்சக்கணக்கான ஐடி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களின் லேப்டாப்களில் புதிய கண்காணிப்பு மென்பொருளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாம்.
சுமார் 6 லட்சம் ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டுள்ள லேப்டாப்களில் Digital User Experience Monitoring என்ற புதிய மென்பொருளை பதிவிறக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கையா அல்லது சைபர் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியா என்பது குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்தக் கண்காணிப்பு மென்பொருளானது ஊழியர்களின் லேப்டாப்களில் இருந்து ஊழியர்கள் எந்தெந்த செயலிகளை பயன்படுத்துகிறார்கள் , ஒவ்வொரு செயலியிலும் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள்?, லேப்டாப்களில் என்ன மாதிரியான செயல்பாடுகள் நடக்கின்றன என்பது போன்ற விவரங்களை சேகரிக்கிறதாம். இது குறித்து ஊழியர்களுக்கு முன் கூட்டியே எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இதனால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டிசிஎஸ் தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக பெரிய விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை என்றாலும், நிறுவனம் இதனை இரண்டு முக்கிய காரணங்களுக்காகப் பார்ப்பதாக தெரிகிறது. ஒன்று சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சூழலில், நிறுவனத்தின் ரகசிய தகவல்களை பாதுகாக்கவும், தகுதியற்ற பயன்பாடுகளை தவிர்க்கவும் இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஊழியர்கள் வேலை நேரத்தில் எத்தகைய செயலிகளை பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதன் மூலம், பணித்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு விஷயமாகவும் இது பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த கண்காணிப்பு முறை பற்றி ஊழியர்களிடையே பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து ஊழியர்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. எந்த நிறுவனத்தின் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது, இந்த தகவல்கள் யாரிடம் பகிரப்படும், ஊழியர் வாரியாக தரவுகள் சேமிக்கப்படுகிறதா போன்ற கேள்விகளுக்கு இதுவரை தெளிவான பதில் இல்லை என கூறப்படுகிறது.
சுமார் 6 லட்சம் ஊழியர்களை கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தில், இவ்வளவு பெரிய அளவிலான தரவுகளை கையாளுவது ஒரு சவாலான காரியம். இது போன்ற கண்காணிப்பு கருவிகள் நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்கவும், செயலிகளின் செயல்திறனை அறியவும் உதவுவதாக கருதினாலும், அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ஊழியர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, டிசிஎஸ் தனது ஊழியர்களின் தரவு கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, அது நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய பழைய தரவு என்று விளக்கமளித்திருந்தது. ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் லேப்டாப் முன்னிலையில் தான் உட்கார்ந்திருக்கிறார்களா, எத்தனை முறை மவுசை கிளிக் செய்கிறார்கள் என்பதை கூட நிறுவனங்கள் கண்காணிக்கும் சூழலில் டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களிடம் முன் கூட்டியே தெரிவிக்காமல் இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

