ரஸீன் ரஸ்மின்
புத்தளம் – பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பாலாவி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 994 கிலோ 150 கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காகப் புத்தளம் தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புத்தளம் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

