
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தனிப்பட்ட தேவைக்காகத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிணை வழங்கியுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கினை மீண்டும் எதிர்வரும் ஜூலை மாதம் 10-ஆம் திகதி அழைப்பதற்கும் நீதிமன்றம் தீர்மானித்தது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மூத்த மகன் ஜோஹன் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் ஆகியோர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எத்தனோல் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காக லங்கா சதொச நிறுவனத்தின் லொறியைப் பயன்படுத்தியதன் மூலம், அரசாங்கத்திற்கு சுமார் 2.5 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

