கோலாலம்பூர்:
மலேசியாவில் அரசு சாரா தொண்டு நிறுவனம் (NGO) ஒன்றில் சுமார் 230 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து, வங்கிக் கணக்குகளின் பணப் பரிமாற்றங்களை ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அண்மைக்காலம் வரையிலான நிதி ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் வங்கிகளிடமிருந்து முழுமையான அறிக்கைகள் கிடைத்துவிடும் என்றும் ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இம்முறைகேடு தொடர்பாக இதுவரை 18.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 14 அசையா சொத்துகளும், 8.73 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் நன்கொடை தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் நிதியைக் கண்காணிக்க முறையான சட்டங்கள் இல்லாததே இது போன்ற முறைகேடுகளுக்குக் காரணம் என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இவற்றை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.




