
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள எரிக் எஸ். மயர், தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக திங்கட்கிழமை (24) மாலை கொழும்பை வந்தடைந்தார்.
“இலங்கையில் அமெரிக்காவினைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்குக் கிடைத்த கௌரவமாகும். அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும், எமது பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும் மற்றும் அமெரிக்கா – இலங்கை ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் அதிகரித்த செழிப்பினை வழங்கும் ஒரு பங்காண்மையினை மேம்படுத்துவதற்காக, எமது இரு ஜனநாயகங்களுக்குமிடையில் காணப்படும் பலமான அத்திவாரத்தின் அடிப்படையில் எமது உறவுகளை மேலும் கட்டியெழுப்புவதற்கு நான் எதிர்பார்க்கிறேன்” என இலங்கைக்கான 29ஆவது அமெரிக்கத் தூதுவராகச் சேவையாற்றுவதற்கான வாய்ப்புத் தொடர்பில் அவர் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
இலங்கைக்கான தூதுவராகப் பெயரிடப்படுவதற்கு முன்னர், நோர்வேயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவும், அதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.

