தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் அதன் வடக்கு மாகாண இணைப்பாளரும் அரை நூற்றாண்டுக்கும் அதிக ஊடக அனுபவம் கொண்ட மூத்த பிராந்திய ஊடகவியலாளருமான ஏ .என்.எஸ் .திருச்செல்வம் (74 வயது) காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் வடமராட்சி புலோலியை சேர்ந்த என்.எஸ் .திருச்செல்வம் அவர்கள் 1975 ஆம் ஆண்டு லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிக்கையின் பருத்தித்துறை நிருபராக தன்னை இணைத்துக் கொண்டது முதல் தனது இறுதி மூச்சு வரை ஊடகப்பணியை உயிர் மூச்சாகக் கொண்டிருந்த ஒருவர். பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கு திருச்செல்வம் அவர்கள் சிறந்ததொரு முன்மாதிரியாகவே இருந்தார் .
தலைநகரிலிருந்தும்,வடக்கு மாகாணத்திலிருந்தும் வெளிவரும் பத்திரிகைகளில் பிராந்திய,தேசிய செய்திகள், கட்டுரைகள் என தனது கனதியான எழுத்துக்களினால் தமிழ் மக்களின் மனங்களில் ஆளப் பதிந்த திருச்செல்வம் அவர்கள் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றித்தின் தலைவராகவும் பின்னர் அதன் வடக்கு மாகாணத்திற்கான இணைப்பாளராகவுமிருந்து இந்த ஒன்றியத்தின் ஊடாக பிராந்திய ஊடகவியலாளர்களின் நலன்களுக்காக,உரிமைகளுக்காக,அவர்களின் ஊடகப்பணி மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை முன்னெடுத்திருந்தவர் .தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வளர்ச்சி, செயற்பாடுகள்,முன்னெடுப்புகளுக்கு முதுகெலும்பாக இருந்தவர்.
யுத்த கால சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால் மிக்க காலகட்டங்களில் கூட தனது ஊடக நேர்மை தவறாது அயராது களப் பணியில் ஈடுபட்டவர். அவரது இந்த அர்ப்பணிப்பு மிக்க பணியை கௌரவிக்கும் முகமாக கலாபூஷணம், கலைப்பருதி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
தனது துணிச்சலான,நேர்மையான செய்திகள், எழுத்துக்கள் ஊடாக தமிழ் ஊடகங்களில் தனி மதிப்பும் தமிழ் மக்களின் மனங்களில் தனி இடமும் பிடித்திருந்த திருச்செல்வம் அவர்களின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் பேரிழப்பாகவேயுள்ளது. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்திக்கும் பிரார்த்திக்கின்றோம். R

