சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து பழங்களும் நச்சுத்தன்மையற்ற, உயர்தரமான மற்றும் பாதுகாப்பான பழங்கள் என்பதை உறுதி செய்வதற்கான விசேட ஒழுங்குமுறைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நுகர்வோரின் சுகாதாரத்தை பாதுகாப்பதும், பழங்களை செயற்கையாக பழுக்கச் செய்யும் போது ஏற்படும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை குறைப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், பழ விவசாயிகள், இடைத்தரகர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பல்பொருள் அங்காடி நிறுவனங்களுக்கு நச்சுத்தன்மையற்ற பழங்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில பழ உற்பத்தியாளர்களுக்கு தொழில்நுட்ப அறிவு வழங்கி, நச்சுத்தன்மையற்ற முறையில் பழங்களை பழுக்கச் செய்யும் மாதிரி தொழில்நுட்ப கூடங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன், பாதுகாப்பான பழங்களுக்கு விசேட தரச் சான்றிதழ் வழங்குதல், சந்தையில் உடனடி பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், நவீன பழுக்கச் செய்யும் கூடங்களை அமைத்தல் மற்றும் விற்பனையாளர்களை பதிவு செய்து பயிற்சி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். R
