காகங்களைச் சுட்டுக் கொல்லும் நடவடிக்கையை மேலும் பல வட்டாரங்களுக்குப் படிப்படியாக விரிவுபடுத்தப்போவதாக தேசியப் பூங்காக் கழகம், அறிவித்துள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாதம் இந்த நடவடிக்கை தொடங்கியதிலிருந்து, இதுவரை 500 காகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, புக்கிட் பாஞ்சாங், மரின் பரேட் மற்றும் தானா மேரா ஆகிய இடங்களுக்கு இந்த நடவடிக்கையைக் கழகம் விரிவுபடுத்துகிறது.
குறித்த இடங்களிலுள்ள காகங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் கழகம் தெரிவித்துள்ளது. அப்பகுதிகளில் பாதுகாப்பாகக் காகங்களைச் சுட முடியும் என்பதால், முதலில் அங்கு நடவடிக்கையை விரிவுபடுத்தப்போவதாக அது குறிப்பிட்டது.
முன்னதாக, பீஷான், ஜூரோங், கிராஞ்சி, பொங்கோல், செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ, உட்லண்ட்ஸ் மற்றும் யீஷூன் ஆகிய வட்டாரங்களில் காகங்களைச் சுடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காகங்களைக் கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கை 2020-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விரிவுபடுத்தப்படுகிறது.
காகங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதால் சிங்கப்பூரின் இயற்கைச் சூழல் பாதிக்கப்படலாம் என்றும், குடியிருப்பாளர்கள் காகங்களால் தாக்கப்படலாம் என்றும் தேசியப் பூங்காக் கழகம் எச்சரித்துள்ளது.


