புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிறுவனை, சிறைச்சாலைக்கு மாற்றுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் புதன்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார். அத்துடன், 17-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் திகதி, புத்தளத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஆதம் பாவா அப்துல் லதீப் என்ற முச்சக்கர வண்டி ஓட்டுநர், சவாரி ஒன்றுக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மறுநாள் அதிகாலை அடப்பனவில்லு பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக அன்றைய தினமே இந்தச் சிறுவன் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை (03) அன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உயிரிழந்தவர் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், “நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தச் சிறுவன், அங்கிருந்து மூன்று முறை தப்பியோடியுள்ளார். இறுதியாக மே 30-ஆம் திகதி தப்பியோடிய போது, பொதுமக்களால் பிடிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களும் உள்ளன.
கொலைக் குற்றத்தைச் செய்தும் தவறை உணராத இச்சிறுவன், சிறுவர் இல்லக் கட்டுப்பாட்டை மீறி வெளியில் சுற்றித் திரிவது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலானது; நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் குலைப்பது,” என்று வாதிட்டார். அத்துடன், அச்சிறுவனைச் சிறைக்கு மாற்றக் கோரினார்.
சந்தேக நபரான சிறுவன் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, சிறுவன் இரண்டு முறை மட்டுமே தப்பியதாகவும், மூன்றாவது முறை தப்பியதாகக் கூறப்படும் வீடியோ ‘எடிட்’ (Edit) செய்யப்பட்டது என்றும் கூறினார். மேலும், அச்சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்கான தனியார் மருத்துவச் சான்றிதழையும் சமர்ப்பித்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், “நீதிமன்றக் காவலில் உள்ள ஒருவரைத் தனியார் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியாது. மேலும், சிறுவன் ஆரோக்கியமாக இருப்பதாகச் சிறுவர் இல்லமே அறிக்கை தந்துள்ளதால், தனியார் அறிக்கையைக் கருதக் கூடாது,” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான அச்சிறுவனை உடனடியாகச் சிறுவர் இல்லத்திலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்குத் தகுதியான அடுத்த கட்டத்திற்குப் பிறகு, மேல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

