Last Updated:
டெல்லியில் வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு முதல்வர் ரேகா குப்தா, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 33 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் SIR படிவத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி முதலமைச்சர் ரேகா குப்தா, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 33 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 31 ஆம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 47 லட்சத்து 60 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. அவர்களில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் மறு ஆய்வின் போது கண்டறியப்பட்ட முரண்பாடுகள் குறித்து விளக்கமளிக்கக் கோரி 33 லட்சத்து 10 ஆயிரம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அதன்படி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், அவரது குடும்பத்தினர் 5 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பழைய வாக்காளர் பட்டியலுடன் பொருந்தவில்லை என்று தெரிகிறது. இது குறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கும் அவரது பெற்றோருக்கும் இடையேயான வயது வித்தியாசம் குறித்து விளக்கம் கேட்டு அவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் முதலமைச்சர் ரேகா குப்தா தேவையான ஆவணங்களை வழங்கிய பிறகு, விவரங்கள் சரிபார்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், பாஜக நிர்வாகி வீரேந்திர குமார் சச்தேவா உள்ளிட்டோருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதற்கிடையே, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் நீக்கப்பட்டதை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.


