Last Updated:
செஷல்ஸ் நாட்டில் இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்குடன் அணிந்து வகுத்து வந்த போது பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
கடல்சார் பாதுகாப்பு, பருவநிலை மாற்ற நடவடிக்கைகள், இளைஞர் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் ஒத்துழைப்பில் செஷல்ஸ் நாட்டுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
செஷல்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, இந்தியாவுக்கும் செஷல்ஸுக்கும் இடையிலான பண்பாட்டு ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, சமோசா, சட்னியின் சுவைகள் முதல் தீபாவளி, தைப்பொங்கல் மற்றும் நவராத்திரியின் போது நடைபெறும் கர்பா கொண்டாட்டங்கள் வரை இரு நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் இந்த தொடர்பைக் காண முடியும் என்று தெரிவித்தார்.
செஷல்ஸ் நாட்டில் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் கட்டுவதற்கும், இந்தியக் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தின் பல்வேறு அம்சங்களையும் பிரபலப்படுத்துவதற்கும் செஷல்ஸ் இந்துக் கோவில் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். pic.twitter.com/kWmaLrMTxJ
— Narendra Modi (@narendramodi) June 29, 2026
இரு நாடுகளையும் இணைப்பதில் பாலம் போன்று இந்திய பெருங்கடல் செயல்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, செஷல்ஸ் நாட்டின் 50-ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, அங்கு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை அவர் பார்வையிட்டார். இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்து வந்த போது பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
மேலும் செஷல்ஸில் கோயில் ஒன்றிலும் பிரதமர் வழிபட்டுள்ளார். இதுகுறித்து பகிர்ந்துள்ள பிரதமர், “செஷல்ஸ் நாட்டில் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் கட்டுவதற்கும், இந்தியக் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தின் பல்வேறு அம்சங்களையும் பிரபலப்படுத்துவதற்கும் செஷல்ஸ் இந்துக் கோவில் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்” என்று எக்ஸ் தளத்தில் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.


