சி.என்.என். நியூஸ்18-ல் பேசிய ஒரு மூத்த அதிகாரி, ”துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது இந்த உள்ளூர் புகைப்படக் கலைஞர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி சென்று, ஒரு மரத்தின் மறைவில் ஒளிந்துள்ளார். ஆனால், நிகழ்வு நடந்தபோது அவர் தொடர்ந்து வீடியோ எடுத்து, முழு பயங்கரவாதத் தாக்குதலையும் பதிவு செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், நான்கு பயங்கரவாதிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து புல்வெளியின் இருபுறமும் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு குழுவில் இருந்த இருவர் அங்கே இருந்த சிற்றுண்டி கடைகளின் அருகே நின்றிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ”மதியம் 2.30 மணியளவில், கடைகளுக்குப் பின்னால் மறைந்திருந்த இரண்டு பயங்கரவாதிகள் வெளியே வந்தனர். அவர்கள் முதலில் அங்கு சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த உள்ளூர்வாசிகள் அல்லாதவர்களிடம் அவர்களின் மதம் குறித்து கேட்டனர். சிலர் கல்மாவை ஓதச் சொன்னார்கள்; முடியாதவர்கள் கொல்லப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது போல, இது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு அல்ல என்று NIA நம்புகிறது. ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் தலையை குறிவைத்து தாக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் பிழைத்தவர்களின் தெரிவித்திருப்பதாவது; முதல் இரண்டு பயங்கரவாதிகள் நான்கு சுற்றுலாப் பயணிகளை தலையில் சுட்டுக் கொன்றபோது பீதி ஏற்பட்டது. பின்னர் மற்ற இரண்டு பயங்கரவாதிகள் ஜிப் லைன் அருகே இருந்து வெளிவந்து தப்பி ஓடிய கூட்டத்தை நோக்கி சுடத் தொடங்கினர்.
பயங்கரவாதிகள் இரண்டு மொபைல் போன்களையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது, ஒன்று சுற்றுலாப் பயணிக்கு சொந்தமானது, மற்றொன்று உள்ளூர்வாசிக்கு சொந்தமானது. பயங்கரவாதிகளின் தற்போதைய இருப்பிடம் அல்லது நடமாட்டம் குறித்த முக்கியமான ஆதாரங்களை வழங்க முடியும் என்பதால், இரண்டு போன்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், சம்பவத்திற்குப் பிறகு போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள் : தமிழகத்தில் உள்ள 250 பாகிஸ்தானியர்கள் நாளை மறுதினத்திற்குள் வெளியேற சம்மன்… சென்னையில் மட்டும் 15 பேர் தங்கியுள்ளதாக தகவல்…
சம்பவ இடத்தில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் AK-47 மற்றும் M4 வகை ரைபிள்களின் வெற்று தோட்டாக்களை எடுத்துள்ளனர். இது குறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ஆப்கானிஸ்தான் போர் முடிவடைந்ததிலிருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் M4 வகை ரைபிள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதற்கான கூடுதல் சான்றாக செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நான்கு பயங்கரவாதிகளில் குறைந்தபட்சம் ஒருவராவது உள்ளூர்வாசி ஆதில் தோகர் என்று புலனாய்வு குழுக்கள் நம்புகின்றன. ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆவணத்தின்படி, ஆதில் தோகர் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு 2018 இல் ஹிஸ்புல் முஜாஹிதீனில் சேர்ந்தார். அவர் தகுந்த ஆவணங்களுடன் பாகிஸ்தானுக்குச் சென்று, ஹிஸ்புல் முஜாஹிதீனில் இருந்து விலகி லஷ்கர்-ஏ-தொய்பாவில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், லஷ்கருடன் பயிற்சி பெற்ற பிறகு, அவர் 2024 இல் பள்ளத்தாக்குக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு தோகர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களில் உதவி செய்ததாகவும், பிற பயங்கரவாதத் தாக்குதல்களில் வழிகாட்டியாகவும் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Jammu and Kashmir
April 27, 2025 4:11 PM IST

