இதுகுறித்து “கண்மணி அக்ரி குரூப்” நிர்வாகி கூறியதாவது, “24 மணி நேரமும் தரமான பசும்பால் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த திட்டத்திற்காக முயற்சி செய்து வந்தோம். தற்போது ‘ஃப்ரெஷ் கண்மணி மில்க்’ என்ற பெயரில் இந்த மில்க் ஏடிஎம்மை தொடங்கியுள்ளோம். கடந்த 6 ஆண்டுகளாக அரசின் அங்கீகாரத்துடன் பால் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு தரமான பால் எளிதாக கிடைக்காதது பெரிய சிக்கலாக இருந்தது. அதனால் நேரடியாக நுகர்வோரிடம் பாலை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை தொடங்கினோம். எங்கள் நிறுவனம் ‘Direct to Customer’ முறையில் செயல்படுகிறது. பொதுமக்களே நேரடியாக வந்து, அவர்களுக்கு தேவையான அளவு பாலை வாங்கிச் செல்லும் வசதி இந்த ஏடிஎமில் உள்ளது.
இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி, எச்டிஎப்சி வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு வழங்கின. அதனால் தான் இந்த முயற்சியை செயல்படுத்த முடிந்தது. நாங்கள் சேகரிக்கும் பசும்பாலில் 16 வகையான தரச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தரம் உறுதி செய்யப்பட்ட பாலை மட்டுமே ஏடிஎமில் நிரப்புகிறோம். தினமும் புதிய பால் லோடு செய்யப்படுகிறது. ஒரு நாளில் 20 முதல் 30 லிட்டர் வரை பால் மீதமாக இருந்தால், அதை தொழிற்சாலைக்கு கொண்டு சென்று தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துகிறோம்.
இந்த மெஷின் தொடர்ந்து குளிரூட்டும் வசதியுடன் இயங்குகிறது. பாலை 4 டிகிரி வெப்பநிலையில் குளிரூட்டிய பிறகே ஏடிஎமில் நிரப்புகிறோம். 5 முதல் 6 மணி நேரம் வரை தொடர்ந்து பாலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். தேவை அதிகரித்தால் ஒரே நாளில் இரண்டு முறை கூட பாலை நிரப்ப தயாராக இருக்கிறோம்.
இந்த ஏடிஎமின் கொள்ளளவு 200 லிட்டர். பொதுமக்கள் ரூ.10 முதல் ரூ.60 வரை தேவையான தொகையை செலுத்தி பால் வாங்கலாம். ஆனால் சரியான தொகையை செலுத்த வேண்டும். உதாரணமாக ரூ.100 செலுத்தினால் மீதிப்பணம் திருப்பி வழங்கப்படாது. மேலும், கியூஆர் கோடு வசதியும் இதில் உள்ளது. ஜி-பே உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனை முறைகள் மூலம் பணம் செலுத்தி தேவையான அளவு பாலை பெற்றுக்கொள்ளலாம்.
மாதாந்திரமாக பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக ஸ்மார்ட் கார்டு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கார்டில் தேவையான தொகையை ரீசார்ஜ் செய்து தினமும் தேவையான அளவு பாலை எடுத்துக்கொள்ளலாம். இந்த மெஷினை பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் இரண்டு முறை மெஷின் முழுமையாக சுத்தம் செய்யப்படுகிறது. பால் நிரப்பும் முன்பும் சூடான நீர் மூலம் மீண்டும் சுத்தம் செய்கிறோம். இவ்வாறு செய்தால் மட்டுமே பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி பால் தரத்தை பாதுகாக்க முடியும்.
இந்த மெஷின் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான வீடியோ வெளியான பிறகு மதுரையில் மட்டும் சுமார் 150 இடங்களில் மில்க் ஏடிஎம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன. மதுரையின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் தலா ஒரு ஏடிஎம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். அரசு மருத்துவமனை அருகிலும் அமைக்க திட்டம் உள்ளது.
மக்களுக்கு இந்த சேவை மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் தாங்களே நேரடியாக மெஷினை பயன்படுத்தி பால் எடுப்பது புதுமையான அனுபவமாக உள்ளது. அதைவிட முக்கியமாக தரமான பாலை தொடர்ந்து வழங்குவதில்தான் எங்கள் கவனம் உள்ளது. அதற்காக தினமும் தர அறிக்கையை தயாரித்து ஏடிஎமில் ஒட்டி வைக்கிறோம். வாடிக்கையாளர்கள் வாங்கும் பாலின் தர விவரங்களை நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளலாம்.
தற்போது எங்களுக்கு சொந்தமாக பண்ணை இல்லை. ஆனால் 650-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் இரண்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பாலை சேகரிக்கிறோம். தொழிற்சாலைக்கு வரும் உடனே தரச் சோதனை நடத்தப்படுகிறது. தரமான பாலை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
நான் சிறுவயதிலிருந்தே கால்நடை வளர்ப்பு குடும்பத்தில் வளர்ந்தவன். என் பெற்றோர் இன்னும் பால் பண்ணை நடத்தி வருகின்றனர். முன்பு சாப்ட்வேர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த நான், 2019ஆம் ஆண்டு சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்லாமல், மதுரையிலேயே சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பால் தொழிலை ஆரம்பித்தேன்.
இரவு நேரங்களில் இந்த ஏடிஎமுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது. காலை முதல் மாலை 6 மணி வரை விற்பனை மெல்ல இருந்தாலும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மக்கள் அதிக அளவில் வந்து பால் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த மெஷின் முழுவதும் தமிழில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தும் முறைகளும் தமிழிலேயே காட்டப்படுவதால், யாருடைய உதவியும் இல்லாமல் பொதுமக்கள் எளிதாக பயன்படுத்த முடிகிறது.
இந்த சேவை தொடங்கப்பட்டு தற்போது இரண்டு நாட்களே ஆன நிலையில், முதல் நாளில் சுமார் 30 லிட்டர் பாலும், இரண்டாம் நாளில் 90 லிட்டர் வரை பாலும் விற்பனையாகியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் பால் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பலர் இந்த தொழிலில் லாபம் எவ்வளவு கிடைக்கும் என்று கேட்கிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க லாப நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட முயற்சி அல்ல. தரமான பசும்பாலை மக்கள் எளிதாக பெற வேண்டும் என்பதற்காகவே இந்த சேவையை தொடங்கியுள்ளோம். மின்சாரம், போக்குவரத்து, ஊழியர்கள், தரச் சோதனை மற்றும் குளிரூட்டும் வசதிகளுக்கான செலவுகள் அதிகமாக உள்ளன.
பச்சை பாலை நேரடியாக ஏடிஎமில் நிரப்ப முடியாது. அப்படி செய்தால் பால் விரைவில் கெட்டுப்போய்விடும். அதனால் 4 டிகிரி வெப்பநிலையில் குளிரூட்டப்பட்டு, ஆய்வகத்தில் 16 தரச் சோதனைகள் செய்யப்பட்ட பிறகே பாலை ஏடிஎமில் நிரப்புகிறோம். பாலில் எந்த விதமான கிரீமும் சேர்க்கப்படுவதில்லை. சேகரிக்கப்படும் இயற்கை தரத்தில் குளிரூட்டப்பட்ட பசும்பாலே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது தினசரி 90 லிட்டர் வரை விற்பனை நடைபெறுகிறது. இந்த ஏடிஎம் முழு திறனில் இயங்க வேண்டுமெனில் தினசரி குறைந்தது 150 லிட்டர் வரை விற்பனை ஆக வேண்டும்” என்றார்.
மேலும், இந்த சேவையை பயன்படுத்தும் பொதுமக்கள் கூறுகையில், “இரவு நேரத்திலும் தரமான பசும்பால் கிடைப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் இரண்டாவது முறையாக இங்கு வந்து பால் வாங்கிச் செல்கிறேன். இந்த மில்க் ஏடிஎம் மதுரை மக்களுக்கு மிகவும் பயனுள்ள புதிய முயற்சி. பால் மிகவும் தரமாகவும் இயற்கை சுவையுடனும் உள்ளது. மதுரை மக்கள் இந்த வசதியை அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றனர்.

