Last Updated:
குஜராத் அணி 15.5 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது
ஐபிஎல் 2026 தொடரின் 42-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 13 பந்துகளில் 28 ரன்கள் (5 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் நிதானமாக விளையாடி 40 ரன்கள் சேர்த்தார். ஜேக்கப் பெத்தேல் 5 ரன்களில் வெளியேற, கேப்டன் ரஜத் படிதார் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இறுதியில் புவனேஷ்வர் குமார் 15 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் தரப்பில் அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதன் தொடக்க வீரர்கள் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 18 பந்துகளில் 43 ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசி மிரட்டினார். மறுமுனையில் ஜோஸ் பட்லர் 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
சாய் சுதர்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மிடில் ஆர்டரில் ராகுல் திவேட்டியா ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
குஜராத் அணி 15.5 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.
Apr 30, 2026 11:30 PM IST


